சங்க இலக்கியத்தில் குறிப்பு வினைகள்

சங்க இலக்கியத்தில் குறிப்பு வினைகள் (சொல்லடைவுடன்), சு.அழகேசன், சுதா பதிப்பகம், பக்.996, விலை ரூ.700.

தொல்காப்பியம் முதல் இன்றைய இலக்கணங்கள் வரை குறிப்பு வினையின் இலக்கணங்களை இந்நூல் எடுத்துரைக்கிறது. தமிழ் இலக்கணத்தில் வினைகள் தெரிநிலை வினை, குறிப்பு வினை என இருவகைப்படும்.

வினைகளை வெளிப்படையாக உணர்த்துவன தெரிநிலை வினைகள்; குறிப்பாக உணர்த்துவன குறிப்பு வினைகள். இக்குறிப்பு வினைகள் பெரும்பாலும் காலத்தை உணர்த்துவதாகவே அமையும். தொல்காப்பியர் குறிப்பு வினைகளைப் பயன்படுத்தும்போது, ஆக்கப்பொருள் இல்லாத போதும், ஆகு எனும் வினையைப் பயன்படுத்தியுள்ளார். (எ.கா) நிலைத்து ஆகும்மே, பொருட்டு ஆகும்மே, பயத்த ஆகும், நிலைமைத்து ஆகும் என்பன. இத்தொடர்களில் வரும் ஆகும் என்ற வினையை நீக்கிப் பார்த்தால், அவை குறிப்பு வினைகளாக அமைவதைக் காணலாம்.

இக்குறிப்பு வினையை, குறிப்பு (தொல்காப்பியம்), வினைக்குறிப்பு (நன்னூல்), வினைக்குறிப்பு (வீரசோழியம்) குறிப்பு, வினைக்குறிப்பு (நேமிநாதம், வினைக்குறிப்பு முற்று (தொன்னூல்) முதலிய இலக்கண நூல்கள் பல பெயர்களில் வழங்கியுள்ளன. காலந்தோறும் இக்குறிப்புவினைகள் பலவிதமான வளர்ச்சியும் மாற்றமும் பெற்று, இலக்கணங்களிலும், மொழியியலாளரிடமும் பல சிந்தனை வளர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளதையும் இந்நூல் எடுத்துரைக்கிறது.

சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்பு வினைகளை ஆராய்வதுடன், இலக்கியக் குறிப்பு வினைகளைத் தொல்காப்பிய இலக்கணக் கொள்கைகளோடு ஒப்பிட்டுத் தொல்காப்பியத்தில் இருந்து சங்க இலக்கியங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வளர்ச்சி போன்றவற்றையும் எடுத்துரைக்கிறது. சங்க இலக்கியங்களில் எங்கெங்கே குறிப்பு வினைகள் கையாளப்பட்டுள்ளன என்பதற்கான சொல்லடைவுகளும், வினைச்சொல் பாகுபாடுகளை விளக்கும் அட்டவணைகளையும் தந்திருப்பது கூடுதல் சிறப்பு. தமிழ் இலக்கண-இலக்கிய மாணவர், ஆசிரியர் அவசியம் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல்.

நன்றி: தமிழ் இந்து

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

 

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.