சிறுகதையும் திரைக்கதையும்
சிறுகதையும் திரைக்கதையும், ஜெயகாந்தன், டிஸ்கவரி புக் பேலஸ், பக்.172, விலை ரூ.160.
ஜெயகாந்தன் அறுபதுகளில் எழுதிய சிறுகதைகள் ஒவ்வொன்றும் மறக்க இயலாதவை. மனித வாழ்வின் சாராம்சத்தை உயிர்ப்பு மிக்க அனுபவங்களினூடே பிழிந்து தருபவை. அந்த வரிசையில் இந்நூலில் இடம் பெற்றுள்ள ‘நான் இருக்கிறேன்’ சிறுகதையையும் சொல்லலாம்.
தொழுநோயால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு பிச்சைக்காரர், வாழ்க்கையில் ஆழ்ந்த பிடிப்புடன் இருக்கிறார். கால்களில்லாத மாற்றுத்திறனாளி ஒருவர், ரயிலில் விழுந்து தற்கொலை செய்ய முயலும்போது அவரைத் தடுத்து மீட்கிற பிச்சைக்காரர், வாழ்க்கையின் மீது நம்பிக்கையை மாற்றுத்திறனாளிக்கு உருவாக்குகிறார். ஆனால் பிச்சைக்காரர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்.
மாற்றுத்திறனாளியின் மனதில் இருந்த ‘தற்கொலை செய்து கொள்ள வேண்டும்’ என்கிற எண்ணம் பிச்சைக்காரருக்குத் தொற்றிக் கொள்கிறது. இந்தச் சிறுகதையை மிகவும் அற்புதமாக திரைக்கதையாக்கியிருக்கிறார் ஜெயகாந்தன்.
சிறுகதையின் வடிவமும், திரைக்கதையின் வடிவமும் வெவ்வேறானவை. இந்த வடிவ வேறுபாட்டை மிகவும் நுட்பமாகத் தெரிந்து வைத்திருந்த ஜெயகாந்தன், மிக அற்புதமாக திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்.
சிறுகதையில் வராத பல கதாபாத்திரங்கள் திரைக்கதையில் வருகின்றன. சிறுகதையில் இடம் பெறாத பல சம்பவங்கள் திரைக்கதையில் இடம் பெற்றிருக்கின்றன. கேமரா கோணம், காட்சி அமைப்பு உட்பட திரைக்கதையின் அனைத்துத் தொழில்நுட்பங்களும் இடம்பெற்றுள்ள இந்நூல், திரைப்படத்துறையில் தடம் பதிக்க விரும்பும் அனைவருக்கும் மிகவும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: தினமணி, 7/5/2018.