திருவிளையாடற் புராணம் (மதுரைக் காண்டம் மூலமும் உரையும்)

திருவிளையாடற் புராணம் (மதுரைக் காண்டம் மூலமும் உரையும்), உரையாசிரியர்: முனைவர் பழ.முத்தப்பன, சகுந்தலை நிலையம், பக்.688, விலை ரூ.1200.

வரலாற்றுச் சிறப்புமிக்க எல்லாக் கோயில்களுக்குமே அந்தக் கோயில்களைப் பற்றிய தலபுராணம் எழுதப்பட்டிருக்கும். அவ்வாறு தலபுராணம் பாடியவர்களுள் பரஞ்சோதி முனிவரும், பெரும்பற்றப்புலியூர் நம்பியும் குறிப்பிடத்தக்கவர்கள்.

மதுரை மாநகரில் சிவபெருமான் தம் பக்தர்களின் பொருட்டு நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைச் செய்யுள் வடிவில் பரஞ்சோதியார் தொகுத்தளித்ததே திருவிளையாடற் புராணமாயிற்று. இப்பெயரில் இரு நூல்கள் உள்ளன. ஒன்று பரஞ்சோதியார் பாடியது, மற்றொன்று பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடியது.

பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடிய திருவிளையாடற் புராணத்திற்கு ‘திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் 39’ என்று பெயர். இவ்விரு புராணங்களும் 64 திருவிளையாடல்களை விரித்துரைத்தாலும், இரண்டுக்குமிடையே சிற்சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்நூல் பரஞ்சோதியாரின் திருவிளையாடற் புராணத்தின் முதற்காண்டத்தை விரித்துரைக்கிறது.

பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணம் மதுரைக்காண்டம், கூடற் காண்டம், திருஆலவாய்க் காண்டம் ஆகிய மூன்று காண்டங்களையும், 3362 செய்யுள்களையும் கொண்டது. இம் முதற்காண்டத்தில், காப்புச் செய்யுள், நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, திருக்கயிலாயச் சிறப்பு, மூர்த்தி சிறப்பு ஆகியவற்றுடனும், இந்திரன் பழிதீர்த்த படலம் தொடங்கி, வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் ஈறாக 18 படலங்கள் உள்ளன. செய்யுள்களுக்கான பொருள் விளக்கமும், சொற்பொருள் விளக்கமும் தரப்பட்டிருப்பதுடன் மிக எளிய உரைநடையில், ஆழமும் புலமையும் நிறைந்த உரைவிளக்கமாக வெளிவந்திருப்பது நூலின் சிறப்பு.

நன்றி: தினமணி, 16/10/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *