நடிகையர் திலகம் சாவித்திரி நிழலும் நிஜமும்
நடிகையர் திலகம் சாவித்திரி நிழலும் நிஜமும், இருகூர் இளவரசன், தோழமை வெளியீடு, விலை 225ரூ.
துயர நாயகி சாவித்திரி
எவ்வளவு உயரத்தில் சினிமா ஒருவரைத் தூக்கி நிறுத்துகிறதோ அதைவிடப் பல மடங்கு கீழே தூக்கியும் எறிந்துவிடும். இதற்கு உதாரணம் சாவித்திரியின் வாழ்க்கை. திரைப்படங்களில் தனது அபாரமான நடிப்புத் திறமையால் நடிகையர் திலகமாக வாழ்ந்த சாவித்திரியை மக்களுக்குத் தெரியும். ஆனால், படத் தயாரிப்பாளராக, இயக்குநராக, நெருக்கடியான நேரத்தில் நடிகர் சுருளிராஜனுக்கு ரூ.30 ஆயிரம் கொடுத்து உதவியவராக, குழந்தைத்தனம் மிக்கவராக சாவித்திரியின் பன்முகங்களைக் காட்டியுள்ளார் ஆசிரியர்.
அன்றைய திரையுலகச் சூல், நடிகர் சந்திரபாபுவின் வீட்டை எம்.ஜி.ஆர். மீட்டுக் கொடுத்தது, சாவிரித்திரியின் நிலத்தை திமுகவைச் சேர்ந்த பிரபல நடிகர் குறைந்த விலைக்கு அபகரித்தது, கறுப்புப் பணப் பதுக்கல்காரர்களை விட்டுவிட்டு சாவித்திரி மீதான வருமானவரித் துறையினர் கெடுபிடி என்று அந்தக் காலகட்டத்தை கண்முன் நிறுத்தியுள்ளது புத்தகம்.
பிரபலங்களோடு சாவித்திரி கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்களும் இந்தப் புத்தகத்தில் உண்டு. இந்தியாவில் எந்த நடிகைக்கும் இல்லாத சிறப்பாக அந்திரத்தில் சாவித்திரிக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
எவ்வளவு புகழ் இருந்து என்ன? ‘ப்ராப்தம்’என்ற திரைப்படத்தை எடுத்த சாவித்திரிக்கு கடைசிக் காலத்தில் மகிழ்ச்சியை அனுபவிக்கும் பிராப்தம் இல்லை. திரைப்படங்களில் சாவித்திரியின் சோகத்தைப் பார்த்தால் மனது கனக்கும். புத்தகத்தை படித்து முடிக்கும்போதும் அதே உணர்வு.
-ஸ்ரீதர் சுவாமிநாதன்.
நன்றி: தி இந்து, 12/8/2017.