சம்ஸ்காரம்
சம்ஸ்காரம், கா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி, சந்தியா பதிப்பகம், பக்.176, விலை ரூ.175.
நூலாசிரியரின் 15 சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் படைப்பு. வீதியோரம் கிடக்கும் குப்பைத் தொட்டியில் விழும் எச்சில் இலைக்காகப் போராடும் நாய்க்கும், பிச்சைக்காரனுக்குமான போராட்டம்தான் இப்படியும் சில ஆத்மாக்கள் சிறுகதையின் கரு. 1970 – களில் வெளியான நூலாசிரியரின் முதல் சிறுகதையான இது தினமணி கதிரில் பிரசுரமாகியுள்ளது.
இன்பதுன்பங்களை ஒன்றெனக் கருதும் துறவிகளுக்கும் தாயின் மரணம் புறக்கணிக்க முடியாதது. உறவுகளைக் கடந்தவனுக்கு தாயின் மரணத்தில் பங்கேற்க சாஸ்திரங்கள் அனுமதிக்காவிட்டாலும், தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்வது அவனுக்குக் கடமையாகும். இதுதான் சம்ஸ்காரம் என்ற கதையாக உருவாகி உள்ளது.
மரணம் பற்றித் தமிழில் எழுதப்பட்டுள்ளசிறந்த கதைகளில் ஒன்றாக தொகுப்பில் இடம் பெற்றுள்ள கூடு விட்டு கூடு திகழும். நடுத்தர வர்க்க கதாநாயகன் தனது பெரியப்பாவின் இறுதிச் சடங்குக்கு ஏற்படும் திடீர்ச் செலவை எதிர்கொள்வதுதான் கதை. மரணம், தத்துவம், மனிதம் கலந்த கலவை. பெண் தொடர்புக் குற்றச்சாட்டை அம்மன் கோயில் குருக்கள் தன்னிலை விளக்கம் மூலம் பொய் என நிரூபிப்பதுதான், விஸ்வரூபம், சிறுகதை. அம்மா, அச்வமேதம் கதைகள் ஆழ்ந்த வாசிப்புக்குரியதாக இருந்தாலும் வித்தியாசமான படைப்புகள்.
தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் வெவ்வேறு பரிமாணத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது. அக்கிரகாரத்து கதை மாந்தர்களையும் மொழியையும் இலகுவாகக் கையாண்டுள்ள நூலாசிரியர், விளிம்புநிலை மக்களின் மொழியையும் சிக்கலின்றித் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:தினமணி, 22/7/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818