ஒரு பிடி மண்
ஒரு பிடி மண், ஸ்ரீதர், விஜயா பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ.
கல்யாண பரிசு மூலம் தமிழ்த் திரை உலகில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் ஸ்ரீதர். 1965ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் யுத்தம் மூண்டபோது மக்களுக்கு வீரத்தையும், தேசபக்தியையும் உண்டாக்கும் வகையில் ஒரு திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டார். அதற்காக அவர் எழுதிய கதைதான் ‘‘ஒரு பிடி மண்’’. இப்படத்தில் சிவாஜிகணேசன், முத்துராமன், ஏவி.எம்.ராஜன், கே.ஆர்.விஜயா, பாரதி ஆகியோர் நடிக்க இருந்தனர். இந்த நிலையில் திடீரென்று இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு, யுத்தம் நிறுத்தப்பட்டது. அதனால், திரைப்படம் தயாரிக்கும் திட்டத்தை ஸ்ரீதர் கைவிட்டார். அந்தக் கதையை இப்போது நூல் வடிவில் விஜயா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது. ஸ்ரீதரின் எழுத்து வன்மையால், புத்தகத்தை படிக்கும்போது, காட்சிகள் ஒரு திரைப்படம்போல் நம் மனக்கண் முன் ஓடுகின்றன. இப்புத்தகத்துக்கு, ஸ்ரீதரின் மனைவி தேவசேனா ஸ்ரீதர் அணிந்துரை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 13/1/2016.