காந்தியைக் கொன்றவர்கள்

காந்தியைக் கொன்றவர்கள், மனோகர் மல்கோங்கர், தமிழில் க. பூர்ணசந்திரன், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, பக். 332, விலை 300ரூ.

காந்தி கொலை வழக்கு தொடர்பாக மனோகர் மல்கோங்கர் ஆங்கிலத்தில் எழுதி, 1978இல் வெளியான தி மென் ஹு கில்டு காந்தி என்ற நூலின் தமிழாக்கம். 1948, ஜனவரி 12ஆம் தேதி காந்தி கொலை வழக்குச் சதி தொடங்கியதிலிருந்து 1949, நவம்பர் 15ஆம் தேதி நாதுராம் கோட்ஸேவும், நாராயண ஆப்டேவும் தூக்கிலிடப்படும் வரை நிகழ்ந்தவற்றை, காவல் துறையின் விசாரணைத் தகவலின் அடிப்படையிலும், கொலைச் சதியில் ஈடுபட்டவர்களில் சிலரை, தண்டனை விதிக்கப்பட்ட பிறகு நேரடியாகச் சந்தித்து திரட்டிய தகவல்களின் அடிப்படையிலும் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். காந்தி கொலையின் பிரதான குற்றவாளிகளான நாதுராம் கோட்ஸே, நாராயண ஆப்டே ஆகியோருடன், மற்ற குற்றவாளிகளான விஷ்ணு கர்க்கடே, மதன்லால் பெஹ்வா, கோபால் கோட்ஸே ஆகியோர் கொண்ட தொடர்பு, காந்தியைக் கொல்வதற்காக பூனாவில் தொடங்கி தில்லி வரையில் அவர்கள் செய்த சதி ஆலோசனைகள், திட்டமிட்டு அதைச் செயல்படுத்தியது, கொலைச் சதி தகவல் நூலிழையில் காவல் துறைக்குக் கிடைக்காமல் போனது என காந்தி கொலை செய்யப்பட்டு 67 ஆண்டுகள் ஆன பிறகு இப்போது படித்தாலும் நெஞ்சைப் பதற வைக்கிறது. காந்தி கொலை வழக்கில் சாவர்க்கர் சேர்க்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் விடுக்கப்பட்டது. அவருடைய அரசியல் செயல்பாடுகள் போன்றவை குறித்தும் விரிவாகச் சொல்கிறது இந்நூல். காந்தி கொலை வழக்குச் சதி பற்றிய நூலாக மட்டுமன்றி, அக்கால சமூக வரலாற்றுச் சூழல், பிரிவினையின் போது நிகழ்ந்த கொலைகள், கொடூரங்கள், அப்போதைய அரசுப் பிரதிநிதி மவுண்ட்பேட்டன் பிரபுவின் நடவடிக்கைகள் என அனைத்தையும் பதிவு செய்கிறது. மொழிபெயர்ப்பு என்று கருதவே இடம் தராமல் நேரடித் தமிழ் நூல் போன்ற உணர்வைத் தருவது சிறப்பு. நன்றி: தினமணி, 4/5/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *