கௌடலீயம் பொருணூல்
கௌடலீயம் பொருணூல் (அர்த்த சாஸ்திரம் முதல் பகுதி), மொழிபெயர்ப்பாளர் மு. கதிரேசச் செட்டியார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, பக். 664, விலை 400ரூ.
ஆட்சியியல் என்ற மையக் கருத்தின் அடிப்படையில், ராஜதந்திரி என்று அழைக்கப்படும் கௌடில்யரால் உருவாக்கப்பட்ட இந்நூல், அன்றைய இந்தியாவிலிருந்து பலதுறைசார் அறிவியலையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அன்றைய இந்தியாவின் சிறந்த பகுதிகளை மட்டுமன்றி இருண்ட பக்கங்களையும் அறிய உதவுகிறது. அர்த்த சாஸ்திரத்தின் முதல் பகுதியான இந்நூலில் அரசியல், தொழிற்தலைவர் செயன்முறை, ஒற்றாடல், உழவிலா நிலத்தைப் பயனுற அமைத்தல், கடன் கோடல், தண்டக் கொடுமை எனப் பல்வேறு தலைப்புகளில் எழுபத்தேழு அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வோர் அத்தியாயத்திலும் இடம் பெற்றுள்ள குறிப்புரை மிகவும் பயனுள்ளது. மொழிபெயர்ப்பில் ஆங்காங்கே சொற்களைப் பிரித்து பொருள் உணர (பொற்றொழிற்றலைவன் பொன்+தொழில்+தலைவன்) வேண்டிய இடங்கள் ஆரம்ப வாசிப்பில் சற்றுத் தடங்கலாக இருந்தாலும் ஆழ்ந்த வாசிப்பு அதனை எளிதாக்கிவிடும். அரசியல் தத்தவம், பொருளாதாரம், ராஜதந்திரம், பிற நாட்டுடன் உறவாடுதல் என அரிய பெரிய கருத்துகளை ஆழமாக இந்நூல் எடுத்துரைக்கிறது என்றால் அது மிகையில்லை. நன்றி: தினமணி, 1/6/2015.