உன் மீதமர்ந்த பறவை
உன் மீதமர்ந்த பறவை, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.
பறவைகளாக்கும் கவிதைகள் பழநிபாரதியின் கவிதைகளும் பாடல்களும் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவை. உன் மீதமர்ந்த பறவை என்னும் அவரது இந்தத் தொகுப்பில் இயற்கையும் காதலும் இயற்கை மீதான காதலும் வாஞ்சையுடன் வெளிப்பட்டு கவிதை அனுபவத்தை அர்த்தப்படுத்துகின்றன. மென்மையான உணர்வுகளைச் சொற்களின் வார்ப்பிலிட்டுக் கவிதைகளாய்க் கவனப்படுத்தியுள்ளார் பழநிபாரதி. ஏ.பி. ஸ்ரீதரின் ஓவியங்களும் பழநிபாரதியின் கவிதைகளும் கொண்ட இந்தத் தொகுப்பு மெல்லிய காதலை விரும்புபவர்களுக்கும் இயற்கை நேசர்களுக்கும் விருந்தளிப்பவை. இளம் வெயில், கூந்தல், கூழாங்கற்கள், மழைக்காற்று உள்ளிட்ட பல சொற்களின் வாசனையால் மணக்கிறது இந்தத் தொகுப்பு. கல்லூரிக் காதலர்களிடையே பரிமாறப்படும் மௌனங்களை மொழியாய் மாற்றிக் கவிதைகளாய்க் கடத்தியுள்ளார் பழநிபாரதி. பறவைகளான கதை என்னும் கவிதை காதல் வயப்பட்ட ஆணும் பெண்ணும் இயற்கையோடு, இயற்கையாகக் கலந்துவிட்ட அழகைச் சொல்லாமல் சொல்கிறது. அந்தக் கவிதையில் புறாவைப்போல காதலும் உள்ளொழிந்து வேடிக்கை காட்டுகிறது. ஒன்றையொன்று பின்னி விளையாடும் நெற்கதிர்களைக் காதலர்களின் விளையாட்டுக்கு உவமையாக்கியுள்ளார் அந்தக் கவிதையில் பழநிபாரதி. கவிதை நூலுக்கான முன்னுரையை வழங்கியுள்ளார் அ. முத்துலிங்கம். பழநிபாரதியின் திரைப்படப் பாடல் வரிகளைச் சிலாகித்துள்ள முத்துலிங்கம், எமிலி டிக்கின்ஸன், அன்னா அக்மாட்டோவோ ஆகிய கவிஞர்களின் கவிதைகளை ஒப்பிட்டு எழுதியுள்ளார். பழநிபாரதி தன் கவிதைகளில் கையாண்டுள்ள உவமைகள் சங்க இலக்கியத்தில் காணப்படும் உவமைகளைப்போல பிரமிப்பூட்டுகின்றன என்கிறார் முத்துலிங்கம். -ரோஹின். நன்றி: தி இந்து, 7/5/2014.