பட்டினத்தார் (புதுக்கவிதை வடிவில்)
பட்டினத்தார் (புதுக்கவிதை வடிவில்), காவ்யா பதிப்பகம், சென்னை, பக். 1321, விலை 1300ரூ.
பட்டினத்தார் இயற்றிய பாடல்களை இன்றைய தலைமுறையினரும் கற்றுணரும் வகையில் புதுக்கவிதை வடிவில் தந்துள்ளார் நுலாசிரியர். அதோடு பேரறிவுக் களஞ்சியம் எனும் ஏனைய பாடல்களையும் இந்நூலில் புதுக்கவிதை வடிவில் தந்துள்ளார். இந்த இரண்டையும் படைத்தது வெவ்வேறான பட்டினத்தார் என்ற வாதத்திற்குள் செல்லாமல் பாடல்களின் உட்கருத்தினை படிப்போர் உணரும் வகையில் எளிய நடையில் புதுக்கவிதை வடிவில் தந்திருப்பது புது முயற்சியே. புராணக் கதைகள், நாயன்மார் வாழ்க்கை கோயில்கள், கோயில்கள் பற்றிய செவிவழிச் செய்திகள் என்று பலவற்றைத் திரட்டி, விரித்துக் கூறி பட்டினத்தார் பாடல்கள் மனதில் தங்கும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. புதுக்கவிதை வடிவம் என்பதால் சொற்சுவையும் பொருட்சுவையும் படிக்கப் படிக்க இன்பம் தருவதாய் அமைந்துள்ளது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 12/11/2014.
—-
கதைகள் வழி மூதுரை, நன்மொழி பதிப்பகம், புதுச்சேரி, பக். 80, விலை 50ரூ.
ஔவையார் எழுதிய நீதி நூல்களில் ஒன்று மூதுரை. அழகிய வெண்பாக்களில் மக்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகளை அதில் வழங்கியிருப்பார். அதே கருத்தை சிறுவர் சிறுமியர் உள்ளங்களில் பதிவு செய்யும் நல்முயற்சியாக, இந்நூல் ஆசிரியர் கதைகள் வழி மூதுரையைச் சொல்லி இங்கே தொகுத்துத் தந்துள்ளார். பதினான்கு கதைகளுக்கு வரையப்பட்ட ஓவியங்களும் குழந்தைகளைக் கவரும் கதைகளின் இறுதியில் மூதுரைப் பாடலும் அதற்கான விளக்கமும் இடம்பெறச் செய்திருப்பது சிறப்பு. -இரா. மணிகண்டன், நன்றி: குமுதம், 12/11/2014.