பெத்திபொட்ல சுப்பராமய்யா கதைகள் பாகம்-1
பெத்திபொட்ல சுப்பராமய்யா கதைகள் பாகம்-1, தமிழில்: மதுமிதா,சாகித்திய அகாதெமி, பக்.496, விலை ரூ.365.
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 34 தெலுங்கு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இச்சிறுகதைகளின் மாந்தர்களை நீங்கள் உங்கள் வீட்டருகே, தெருவில், கடைவீதியில், பொது இடங்களில் சந்திக்கலாம்.
ஆதரவற்றவர்கள், அனாதைக் குழந்தைகள், ஒருவேளை உணவு கிடைக்காமல் திண்டாடுபவர்கள், அவர்களின் உளவியல்ரீதியிலான சிக்கல்கள் எல்லாவற்றையும் மிகவும் அற்புதமாகச் சித்திரித்திருக்கிறார். எனினும் இக்கதைகளின் ஊடே மனிதநேயமும், பிறருக்காக வாழ்தலும் பிரதானப்படுத்தப்படுகிறது.
கிணறு தோண்டியவன் எப்போதோ இறந்து போயிருக்கலாம். ஆனால் அவன் இன்னும் தாகம் கொண்ட வழிப்போக்கர்களுக்கு உயிரளித்துக் கொண்டே இருக்கிறான், தானமாக. அவனுடைய ஆத்மா இந்த இடங்களிலேயே பறந்து தாகமெடுத்தவர்களை இந்தப் பக்கமாக இழுத்து வருகிறது. அப்படியான மனிதர்களுக்கு மறு ஜென்மம் கிடையாது. பேரய்யா கிணறு சிறுகதை சொல்லும் நீதி இது.
அருமையாகப் பாடும் பெண்ணை காதலித்து மணம் முடித்துக் கொண்டவன் அவளுடைய பாடும் திறமையை வைத்து பணம் சேர்ப்பதில் குறியாக இருக்கிறான். இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அவளை விட்டு விலகி விடுகிறான். ஆனால் அந்தப் பெண்ணை இளமையில் இருந்தே நேசித்த இன்னொருவன் அந்தப் பெண்ணுக்கு உடல் நலமில்லாதபோது அவளை அருகிலிருந்து கவனித்துக் கொள்கிறான், துன்பகீதம் கதையில்.
இவ்வாறு மனிதர்களின் விதவிதமான மனோபாவங்களைச் சித்திரிக்கும் கதைகளும் உள்ளன. மொழிபெயர்ப்பு என்று துளியும் உணர முடியாதவாறு இச்சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது சிறப்பு.
நன்றி: தினமணி, 13/8/2018/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818