கல்கியின் பொன்னியின் செல்வன்
கல்கியின் பொன்னியின் செல்வன், நாடக வடிவம், சக்தி வெங்கடாசலம் வயிரவன், முல்லை பதிப்பகம், பக். 296, விலை 200ரூ.
அமரர் கல்கியின் படைப்புகளில் தலைசிறந்தது ‘பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுக் கதை. அதன் இலக்கிய ஆழமும், கற்பனை வீச்சும், வண்ணத் தமிழும் படிப்பவர்களை பரவசப்படுத்தும். 2400 பக்கங்களைக் கொண்ட 5 பாகங்களான அந்த நாவலை, 296 பக்கங்களில் நாடக வடிவில் தந்துள்ளார் இந்நூலாசிரியர்.
இவர் இயல், இசை, நாடகத்தின் மீது பற்றுக் கொண்டு, தனது கல்லூரி நாட்களிலேயே நாடகங்களை எழுதி இயக்கும் ஆற்றலைப் பெற்றவர். தற்போது கல்கியின் இந்த சரித்திர நாவலையும் படித்து, உள்வாங்கி அதன் சுவை குன்றாமல் மிகச் சிறப்பாக நாடகமாக்கியுள்ளார். அதுவும் வரலாற்றுக் கதையின் நாடகத்திற்கு உரையாடலில் வரலாற்றுத் தமிழும், உறுதியும், உத்வேகமும், தெளிவும், மகிழ்வும், நகைச்சுவையும் என்று நவரசங்களும் பொருந்தியிருக்க வேண்டும். அதன்படியே இந்நாடகத்தின் உரையாடல்கள் அமைந்துள்ளன.
தவிர, கதையிலுள்ள வந்தியத்தேவன், அருண்மொழித் தேவன், சுந்தரசோழன், ஆதித்த கரிகாலன், குந்தவை தேவியார், நந்தினி, வாசுகி, பழவேட்டையர்கள், இடும்பன்காரி, மந்தாகினி, பூங்குழலி, குடந்தை ஜோதிடர், தலைமை புத்த பிக்ஷு, மந்திரவாதி ரவிதாசன் என்று 36 முக்கிய கதாபாத்திரங்களும் அவர்களுக்கேற்ற நேர்த்தியுடன் அமைக்கப்பட்டு, பொன்னியின் செல்வன் வரலாற்றுக் கதையில் வரும் அனைத்துச் சிறப்புகளும், இந்நாடகத்தில் இடம் பெற்றுள்ள 108 காட்சிகளில் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன. இந்நூல் சிறுவர் முதல் பெரியவர் வரை படித்து மகிழலாம். தவிர, பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்கள் இதிலுள்ள கில காட்சிகளைத் தேர்ந்தெடுத்து, நடித்து மகிழவும் இந்நூல் பெரிதும் துணை புரியும்.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 14/8/19,
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818