காந்தியச் சுவடுகள்
காந்தியச் சுவடுகள், அ.பிச்சை, சந்தியா பதிப்பகம், பக்.144, விலை ரூ.135.
தினமணியில் வெளிவந்த பெரும்பாலான கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. காந்தியின் கொள்கைகளைப் புரிந்து கொள்ளவும், அவரின் தியாக வாழ்கையைத் தெரிந்து கொள்ளவும் இந்நூலில் உள்ள கட்டுரைகள் உதவுகின்றன.
காந்தியுடன் இணைந்து செயல்பட்ட நேரு, பட்டேல், ராஜாஜி ஆகியோருக்கும் காந்திக்கும் இருந்த உறவு, முரண்பாடுகள் என அனைத்து விஷயங்களையும் இந்நூலில் உள்ள கட்டுரைகள் பேசுகின்றன. காமராஜர், முத்துராமலிங்கத் தேவர், சுதந்திரப் போராட்ட வீரர் சோமயாஜுலு, ஓமந்தூரார், அபுல்கலாம் ஆசாத், அம்பேத்கர் ஆகியோர் குறித்த பல செய்திகளும் இடம் பெற்றுள்ளன.
இந்தியா சுதந்திரமடைந்தபோது, காந்தி சுதந்திர தினச் செய்தி தர மறுத்தது, காந்தியை அரை நிர்வாணப் பக்கிரி என்று கூறிய பிரிட்டனின் பிரதமர் சர்ச்சில் காந்தியை கடைசி வரை எதிர்ப்பாளராகவே கருதியது, அம்பேத்கருக்கும் காந்திக்கும் பல முரண்பாடுகள் இருந்தபோதிலும் காந்தியின் இதயத்தில் அம்பேத்கருக்கு தனி இடம் இருந்தது, 1967 தேர்தலில் கல்லூரி மாணவராக இருந்த விருதுநகர் பெ.சீனிவாசனிடம் காமராஜர் தோல்வியடைந்தது, ஆனால் அதை காமராஜர் ஜனநாயகத்தின் வெற்றி என்று சொன்னது என்பன போன்ற பல செய்திகள் வியக்க வைக்கின்றன.
உண்ணாவிரதம் என்பது சத்தியாக்கிரகியின் கடைசி ஆயுதமாகத்தான் இருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அது தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது. விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் அப்புனித விரதம் மேற்கொள்ளப்படக் கூடாது. மக்களைத் திருப்தி படுத்துவதற்காகவும் அவ்வேள்வி நடத்தப்படக் கூடாது என்று உண்ணாவிரதப் போராட்டம் குறித்த காந்தியின் கருத்தை எடுத்துரைக்கும் நூலாசிரியர், இன்று நடக்கும் உண்ணாவிரதங்கள் பொருளற்றவையாக உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை. காந்தியத்தைத் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் பயன்படும் சிறந்த நூல்.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026623.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: தினமணி, 16/4/2018.