ஞான விசாரணை
ஞான விசாரணை (ஆன்மிகக் கட்டுரைகள்)-கெளதம நீலாம்பரன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.364, விலை ரூ.350.
மறைந்த பத்திரிகையாளர் கெளதம நீலாம்பரன் “ஞானபூமி’ உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதிய ஆன்மிகக் கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல், எளிய நடையும் செறிவான கருத்துகளும் கொண்டதாக உள்ளது.
பக்தர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும், நாத்திகர்களின் அவதூறுகளுக்கும் பல கட்டுரைகளில் தெளிவான விளக்கம் அளிக்கிறார் நூலாசிரியர்.
நரகாசுர சதுர்த்தியா, நரக சதுர்த்தியா? ஐயப்பன் வரலாறு, சிவ வழிபாடு, உதங்க மகரிஷிக்கு மானுட சமத்துவத்தைக் காட்ட கண்ணன் நிகழ்த்திய திருவிளையாடல் (ஸ்ரீகிருஷ்ண தரிசனம்) உள்ளிட்ட கட்டுரைகளில் ஆசிரியரின் கனிந்த ஆன்மிக அறிவு வெளிப்படுகிறது.
வசவண்ணர், நாராயண குரு, இளையான்குடி மாறனார், இயற்பகையார், மெய்ப்பொருள் நாயனார் உள்ளிட்ட அருளாளர்களின் வரலாறுகள், பக்தி உணர்வைப் பரப்புகின்றன. திருவல்லிக்கேணி, மாடம்பாக்கம், சங்கரன்கோவில், வடபழனி, எறும்பூர் போன்ற பல திருத்தலங்களைப் பற்றிய அரிய தகவல்களும் இந்நூலில் உள்ளன.
நூலின் பிற்பகுதியில் “ஞானத்தேனீ’ என்ற தலைப்பில் கேள்வி- பதில் பகுதி சிறப்பாக அமைந்துள்ளது. பல கேள்விகளை தாமே எழுப்பி, அதற்கு நூலாசிரியர் அளித்துள்ள விளக்கங்கள், ஆன்மிக ஐயங்களை அகற்றுகின்றன.
புராணக் கதைகளில் பொதிந்துள்ள தத்துவக்கருத்துகளை அறியாமல் குருட்டுத்தனமான சடங்குகளில் மக்கள் தள்ளாடுவதையும் பல கட்டுரைகளில் விமர்சிக்கிறார். இவரது ஆன்மிக விளக்கம் பகுத்தறிவுக்கு ஏற்றதாக அமைந்திருப்பது சிறப்பு.
நன்றி: தினமணி,20/9/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031645_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818