ஞானியின் சமதர்மப் படைப்பாளுமை

ஞானியின் சமதர்மப் படைப்பாளுமை,  இரா.அறவேந்தன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.36, விலை  ரூ.30.

சமகால உலகின் நிகழ்வுகளை, அவற்றிற்கு அடிப்படையாக அமைந்தவற்றைப் புரிந்து கொள்வதிலும், விளக்குவதிலும் பலவிதமான பார்வைகள், கோணங்கள் இருக்கின்றன. கோவை ஞானியின் பார்வையை விளக்கும் சமதர்மப் படைப்பாளுமை, பெரியாரியம், சமதர்மப் பேருணர்வு எனும் இறையுணர்வு ஆகிய மூன்று கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்திருக்கிறது.

ஞானியின் பல நூல்களிலிருந்து பல கருத்துகளை நூலாசிரியர் ஆராய்ந்து ஞானியின் மெய்யியல் சிந்தனை பற்றிய தனது கருத்துகளை இக்கட்டுரைகளில் முன் வைத்திருக்கிறார்.

மார்க்சியம், பெரியாரியம், தமிழ்த்தேசியம் ஆகிய மூன்றும் ஓரணியாகத் திரள வேண்டும் என்பது ஞானியின் விருப்பமாக உள்ளது. இந்த திரட்சிதான் சமதர்மம் என்று கூறும் நூலாசிரியர், பெரியாரிடமும், மார்க்சிய அறிஞர்களிடமும் இடம் பெற்றுள்ள சிறப்புகளை எல்லாம் எடுத்து விளக்கும் ஞானி, பெரியாரிடம் வரலாற்றுப் பார்வை இல்லாததையும், மார்க்சியரிடம் மண்ணின் மக்களோடு மக்களின் கலைகளோடு உறவாடும் தன்மை இல்லாது போனதையும் முக்கியக் குறைகளாகச் சுட்டிக்காட்டுவதன்வழி, ஓர் ஆய்வு ஞானியாகப் பரிணமித்து விடுவதைச் சுட்டிக்காட்டுகிறார்.

கடவுள் பற்றிய ஞானியின் பார்வையை, மனிதத் துன்பங்களுக்கான காரணங்களை, அறிவு வழி நின்று முற்றிலும் இன்னமும் விளங்கிக் கொள்ள இயலா நிலையில், பிரபஞ்சம் தொடர்பான புதிர்களை அறிவியல்துறைகளின் வழி முற்றிலும் விளங்கிக் கொள்ளாத நிலையில், இறை எனும் உணர்வு மக்களிடம் தொடர்ந்து நிலை கொண்டு இருக்கும் என்பது ஞானியின் கருத்தாக அமைகின்றது என்று நூலாசிரியர் விளக்குகிறார்.

ஞானியின் சிந்தனைகளைப் பற்றிய ஆய்வாக மலர்ந்திருக்கும் இந்நூல், அவை தொடர்பாக மேலும் சிந்திக்கத்தூண்டுகிறது.

நன்றி: தினமணி, 20/5/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *