கம்பனின் தமிழமுது
கம்பனின் தமிழமுது,சாலமன் பாப்பையா,கவிதா பப்ளிகேஷன், பக்.336, விலை ரூ.300.
சாலமன் பாப்பையாவின் கம்பனின் தமிழமுது என்ற இந்நூலில், துளசி இராமாயணத்தில் உவமைகள், கம்பனும் பாரதிதாசனும், இராமாயணத்தில் அர்த்த பஞ்சகம், கம்பனில் அமரர்கள், கம்பனின் சூரியன், கம்பனின் கற்பனைகள், கம்பரும் அ.ச.ஞா.வும், மணிவாசகரும் கம்பரும், காப்பிய உதயம் என 9 முத்தான கட்டுரைகள் அடங்கியுள்ளன.
துளசி இராமாயணத்தில் உவமைகள் கட்டுரையில், ராமனுக்கும் பரதனுக்கும் உள்ள பாசத்தை விளக்க, ஆமை எப்படி தனது முட்டைகளை மார்பில் வைத்துக் காக்குமோ, அதுபோல ராமன் இரவு பகல் பரதன் நினைவையே போற்றி வந்தார் என்பது போன்ற துளசி இராமாயணத்தின் உவமைநயத்தை விளக்கும் செய்திகள் இடம் பெற்றுள்ளன. கம்பனும் பாரதிதாசனும் எனும் கட்டுரையில் கம்பனின் கருத்தைத் தழுவி எழுதப்பட்டவை பாரதிதாசனின் பல பாடல்களில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர்.
கம்பனின் கடவுள் நம்பிக்கை, இராமாவதாரப் பாடுபொருள் போன்றவற்றில் பாரதிதாசனுக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தாலும், கம்பனின் கவிதையில் மெய்மறந்தவர் பாவேந்தர் என்கிறார் நூலாசிரியர்.
காப்பிய உதயம் கட்டுரையில் இராமாயணம் இந்திய மொழிகளில் உருவாகிய விதம், அயல்நாட்டு மொழிகளில் இராமாயணம் பெற்றுள்ள தன்மை ஆகியவை குறித்து விளக்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கிய ஆர்வலர்களைக் கவரும் நூல்.
நன்றி: தினமணி, 3/12/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818