கண்மணி சோபியா
கண்மணி சோபியா, கவிஞர் புவியரசு, நந்தினி பதிப்பகம், பக்.170, விலை ரூ.150.
நிகழ்கால நிகழ்வுகளில் அதுவும் சிறார்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் ஏற்படுத்திய வலியை எழுத்தின் வழியே அனல் பறக்க நாவலாகத் தந்துள்ளார் நூலாசிரியர். அவரின் முதல் நாவலான இந்தப் படைப்பு ஓர் அறிவியல் புதினம் என்பது கூடுதல் சிறப்பு.
அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்திய விஞ்ஞானி தேவநாதன், பெண் ரோபோ (கண்மணி சோபியா) ஒன்றை உருவாக்கி தமிழ்நாட்டில் உலவ விடுகிறார். கோவை, குன்னூர், கொடைக்கானல் என அது பயணம் செய்கிறது.
கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சோபியா கண்மணி, காமுகர்களைப் பழிவாங்கவும் செய்கிறாள். படைத்த விஞ்ஞானியே, ;இப்படி மெய்யான பெண்ணாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை என்று வியக்கும் வகையில் ரோபோவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
உடலில் ரத்தமே இல்லாத ரோபோ நம்மை சிலிர்க்க மட்டுமல்ல, இறுதியில் கண்ணீர்விடவும் வைத்துவிடுகிறது.
15 அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவலில் ஒவ்வோர் அத்தியாயத்துக்கும் ஆங்கில, தமிழ் மேற்கோள்கள் தரப்பட்டிருக்கின்றன. அவை கதையின் திருப்பத்தை விளக்கும் குறியீடுகளாக உள்ளன.
யதார்த்த வாழ்வில் தீர்வுகள் கிடைக்காதது போலவே இந்தக் கதையும் முடிவற்று முடிந்து போகிறது. நிர்பயாக்களும், கண்மணி சோபியாக்களும் உருவாகாமல் தடுக்க, சமூக நலம் சார்ந்த நல்லெண்ணங்களை இந்த நாவல் உருவாக்கும் என்று நம்பலாம்.
சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சம் மரண தண்டனை விதிக்க "போக்ஸோ சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நாவல் வாசிப்பின் முடிவில் கிடைத்த ஆறுதல் தரும் அண்மைச் செய்தி.”
நன்றி: தினமணி, 15/7/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818