குயில்பாட்டுத் திறன்
குயில்பாட்டுத் திறன், செ.வை.சண்முகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.280, விலை ரூ.260.
ஓர் இலக்கியத்தைத் திறனாய்வு செய்வதற்கு பலவிதமான கோட்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. இந்நூல் பாரதியாரின் “குயில் பாட்டு’ படைப்பை மொழியியல் இலக்கியத்திறனாய்வு நோக்கில் ஆராய்ந்திருக்கிறது.
இருபதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் மேலை நாடுகளில் தோன்றிய திறனாய்வு முறைதான் மொழியியல் இலக்கியத் திறனாய்வு. முதலில் இலக்கியத்தின் நடை தொடர்பாக ஆராய்ந்த திறனாய்வு, இலக்கியத்தில் காணப்படும் மொழி அமைப்பு முழுவதையும் ஆராயும் மொழியியல் திறனாய்வாக மாறியது.
“மொழியின் அமைப்புதான் இலக்கியத்திற்கு வடிவ அழகைத் தருகிறது. உள்ளடக்கம் சிறப்புடையதாக இலக்கியம் அமைவதற்கும் மொழியே அடிப்படை. எனவே இலக்கியச் சிறப்புக்கு மொழியின் பங்கு பற்றி ஆய்வது மொழியியல் அணுகுமுறை’ ஆகும் என்று கூறும் நூலாசிரியர், பாரதியின் குயில் பாட்டில் காணப்படும் மொழித்திறன், பொருண்மையியல் திறன், அணித்திறன், மெய்ப்பாட்டுத் திறன், எடுத்துரைப்பியல் திறன் ஆகியவற்றைப் பற்றி விரிவாக எடுத்துரைத்திருக்கிறார்.
குயில் பாட்டின் இறுதியில் பாரதியாரே \”ஆன்ற தமிழ்ப் புலவர் கற்பனையே யானாலும்… வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க' கூறியுள்ளதால், குயில் பாட்டை வேதாந்தமாக விரித்து இந்நூல் பொருளுரைக்கிறது. காலம் காலமாக மொழியில் ஏற்படும் மாற்றங்களும், அவை இலக்கியத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் விளக்க மொழியியல் திறனாய்வே உகந்தது என்பதை இந்நூலின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
நன்றி: தினமணி, 10/2/20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818