மனிதனுக்கு மரணமில்லை
மனிதனுக்கு மரணமில்லை, த.ஸ்டாலின் குணசேகரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். பக்.276, விலை ரூ.230.
பொதிகை தொலைக்காட்சியில் தினசரி காலை ஒளிபரப்பாகும் தமிழ் விருந்து நிகழ்ச்சியில் நூலாசிரியர் ஆற்றிய உரைகளின் தொகுப்பே இந்நூல்.
சுவாமி விபுலானந்த அடிகள், ஆர்.கே.சண்முகம் செட்டியார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வ.உ.சிதம்பரம்பிள்ளை, உ.வே.சாமிநாதையர், ரவீந்திரநாத் தாகூர், ஜி.டி.நாயுடு, ஆப்ரகாம் லிங்கன், பெர்னாட்ஷா, தாமஸ் ஆல்வா எடிசன், கேப்டன் லட்சுமி உள்ளிட்ட நாமறிந்த – நாமறியாத – பல ஆளுமைகளைப் பற்றிய மிகச் சுருக்கமானதும், அதே சமயம் மனதில் பதியும் விதமான தகவல்களின், நிகழ்வுகளின் தொகுப்பே இந்நூல்.
1925-இல் பாரதியாரின் பாடல்களை இலங்கையில் பாட புத்தகங்களில் இடம் பெறச் செய்த விபுலானந்தரின் அரிய செயல், 1920-இல் இந்தியாவில் முதல் தொழிற்சங்க இயக்கம் தோன்றுவதற்கு முன்பே 1908-இல் வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஆங்கிலேயருக்குச் சொந்தமான தூத்துக்குடி கோரல்மில்லில் 1000 தொழிலாளர்களை ஒன்று திரட்டி தொழிற்சங்கம் அமைத்தது, முதன்முதலாக சக்கரவர்த்தினி என்ற பெண்கள் இதழுக்குப் பாரதியார் பொறுப்பாசிரியராக ஆனது, காங்கிரஸ் இயக்கம் 1885-இல் தொடங்குவதற்கு முன்பே நாட்டுப்பற்றை வளர்க்கும்விதமாக சுதேசமித்திரன் இதழையும் அதற்கு முன்பே ஹிந்து ஆங்கிலப் பத்திரிகையையும் ஜி.சுப்பிரமணிய ஐயர் தொடங்கியது, 1907 ஆம் ஆண்டு மாண்டிசோரி அம்மையார் மாண்டிசோரி பள்ளியைத் தொடங்கியது;
அது தற்சமயம் ஆங்கில வழிக் கல்விப் பள்ளியாகக் கருதப்பட்டாலும், உண்மையில் மாண்டிசோரி பள்ளி என்பது தாய்மொழி வழிக் கல்வி கற்கும் பள்ளியாக இருந்தது, 94 வயது வரை வாழ்ந்த எழுத்தாளர் பெர்னாட்ஷா மது அருந்தாமல், புகைப்பிடிக்காமல் , மாமிசம் சாப்பிடாமல் கடைசி வரை வாழ்ந்தது என பல அரிய செய்திகளை இந்நூல் நமக்கு வாரி வழங்குகிறது.”
நன்றி: தினமணி, 22/10/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818