நின்று துடித்த இதயம்

நின்று துடித்த இதயம், பெண்ணும் இருதய அறுவை சிகிச்சையும், அகிலா, ஐரிஸ் பதிப்பகம், விலை 100ரூ.

மரணத்தின் விளிம்பைத் தொட்டு மீண்ட அனுபவம்

இதய நோய் அறுவை சிகிச்சைக்குள்ளானது குறித்த தனது அனுபவங்களை ஒருவித சுயஎள்ளலுடன் எழுதியிருக்கிறார் கவிஞரும் சிறுகதையாளருமான அகிலா. இதய நோய் என்றவுடன் அய்யோ என்று பயந்துவிடாமல், அதை எப்படி சாதுர்யமாக எதிர்கொண்டார் என்பதை ‘நின்று துடித்த இதயம்’ நூலில் பதிவு செய்துள்ளார்.

பெண்ணுக்கே உரித்தான மனத்துணிவுடன் தனது உடல், மனப் பிரச்சினைகளை எதிர்கொண்டது குறித்து இயல்பான மொழியில் எழுதியுள்ளார். பைபாஸ் சர்ஜரியின்போது, அறுவைச்சிகிச்சை நடக்கும் ஐந்து மணி நேரம் இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட இதயம், பின்னர் மீண்டும் துடிக்க ஆரம்பித்து இயல்பு நிலைக்கும் திரும்புவது என்பது ஒருவகையில் மருத்துவ அதிசயம்தான். அலோபதி மருத்துவச் சிகிச்சையால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய அகிலா, சோர்ந்துபோய்விடாமல் உடல் பற்றிய பிரேமைகளிலிருந்து விலகி, தன் இருப்பை மறுவாசிப்புச் செய்துள்ளார்.

தனக்கேற்பட்ட இதய நோய், அறுவைச்சிகிச்சை, சிகிச்சைக்குப் பின்னர் வாழ்க்கை என விரிவாக எழுதியிருக்கும் பதிவுகள், நோயை எப்படி எதிர்கொண்டு வாழ்வது என விரிந்துள்ளன.

இயற்கை தந்த உடல்மீது எவ்வித அக்கறையும் இல்லாத போக்கு இன்று பெருகியுள்ளது. செயற்கையான வேதியியல் உரம், கொடிய நச்சுக்கொல்லிகள், மரபணு மாற்றப்பட்ட விதைகள், ஹார்மோன் மருந்தால் வளர்க்கப்படும் கோழிஇறைச்சி என அன்றாட உணவு நஞ்சாகிப்போன சூழல் உருவாகியிருக்கிறது.

தமிழகத்தில் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, குடற்புண் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவிது இன்று சாதாரணமாகிவிட்டது. அதிலும் இதயம் தொடர்பான நோயால் ஒருவர் திடீரென இறந்துபோவது சராசரி நிகழ்வாகிவிட்டது. இந்தியாவில் ஆண்டுதோறும் மாரடைப்பால் சுமார் 90 லட்சம் பேர் மரணமடைகின்றனர். இத்தகைய சூழலில் அகிலா எழுதியுள்ள இந்நூல், ஒருவகையில் எச்சரிக்கையாகவும் இன்னொரு வகையில் நோயை எண்ணி நொடிந்துபோய்விடாமல் எப்படி எதிர்கொள்வது என தைரியமூட்டும் விதமாகவும் உள்ளது.

ஐம்பது வயது குடும்பத்தலைவியான அகிலா தனது உடலில் ஏற்பட்ட தொந்தரவுகள் காரணமாக மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்றபோது, அவரின் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏழு அடைப்புகள் இருக்கின்றன என்றும் உடனடியாக இதயத்தைத் திறந்து அடைப்புகளை சரிசெய்ய வால்வுகள் பொருத்த வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

இதய நோய் என்றவுடன் உடனடி மரணம் என்று பயப்படுகிற சூழலில், எனக்கு இதய நோய் வந்துவிட்டதே என்று பலரும் கழிவிரக்கத்துடன் தன்னையே வதைக்குள்ளாக்குற நிலையில் அகிலா எழுதியுள்ள அனுபவப் பதிவுகள், பொதுப்புத்தியில் பலருக்கும் தெளிவை உண்டாக்கும்.

பெண்களின் உடல்வாகு, இயற்கையுடன் நெருங்கிய தொடர்புடைய நிலையில் மாதவிலக்கு, மகப்பேறு, மெனோபாஸ் போன்றவை பெண்ணுடலில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அதிலும் நாற்பது வயதைக் கடந்த பின் உடலைப் பொருட்படுத்தாமல் அன்றாட வீட்டு வேலைகளில் வதங்கி நேரிடுகிறது. இத்தகைய பெண்கள் தங்கள் உடலைக் கவனிக்க வேண்டியதன் அடிப்படைக் காரணங்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.

மோசமான நோய் என்று அறிந்தால் பீதியடையாமல், கலவரப்படாமல் நோயை எப்படி அணுகுவது என்பதற்கு வழிகாட்டியாக அகிலாவின் மருத்துவமனை அனுபவங்கள் அடங்கிய இந்தப் புத்தகம் உதவிடும்.

-ந.முருகேச பாண்டியன்.(எழுத்தாளர்)

நன்றி: தி இந்து, 24/11/2018.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

 

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *