ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம், தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், பக்.312, விலை ரூ.250.
தமிழருவி மணியனின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் தன்வரலாற்று நூல் இது. எத்தனையோ அரசியல் தலைவர்கள் சுயசரிதை நூலை இயற்றி இருக்கிறார்கள்; ஆனால் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு நூலாக இது விளங்குகிறது. தமிழறிவு மணியனைப் போலவே அவரது எழுத்துக்களும் எளிமையின் அடையாளமாக இருப்பது நூலுக்கு சிறப்பு சேர்க்கிறது.
அரசியலில் தடம் மாறாமல், கொண்ட கொள்கையிலிருந்து மனம் மாறாமல், 70 ஆண்டு காலம், தான் வாழ்ந்த வாழ்க்கையை வாசகனுடன் பகிர்ந்துள்ளார் தமிழருவி மணியன், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அ.தி.மு.க.வில் இணைய அழைத்தபோது கூட அதனை மரியாதையாக மறுதலித்த கதையை நூலில் விவரித்துள்ளார்.
கருணாநிதி, மூப்பனார், ஜெயலலிதா போன்ற தமிழக அரசியலின் தனிப்பெரும் ஆளுமைகள் உடனான தனது அனுபவங்களையும் நூலில் காட்சிப்படுத்தியுள்ளார். சாமானிய குடும்பத்தில் பிறந்த மிகச் சாதாரணமான மனிதன் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக உருவெடுத்த கதையையும், அரசியலின் அரியணையில் உயரிய பதவிகள் வந்தபோதெல்லாம் அதனை உதாசீனப்படுத்தியதையும் நூலாசிரியர் பக்கத்துக்குப் பக்கம் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார். அவற்றைப் படிக்கும்போது வாசகனின் புருவங்கள் வில்லாக வளைந்தால் அதில் வியப்பில்லை. மொத்தத்தில் ஓர் அறச்சீற்றவாதியின் அரிதாரம் கலக்காத படைப்பாக விளங்குகிறது இந்நூல்.
நன்றி: தினமணி, 06-04-2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818