திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்,  பெரும்பற்றப்புலியூர் நம்பி, உரையாசிரியர்: மு. அருணகிரி, அருணா பப்ளிகேஷன்ஸ்,  பக்.808, விலை ரூ.990. 

“பாண்டிப் பதியே பழம்பதி’ என்று கூறுவர். பாண்டிய நாட்டின் தலைநகராம் மதுரையில் திருவாதவூரருக்காகவும், பிற உயிரினங்களுக்காகவும் அறுபத்து நான்கு திருவிளையாடல்களை நிகழ்த்திக்காட்டினார் சொக்கநாதப் பெருமான்.

இறைவனின் திருவிளையாடல்களை ஓரிரு புலவர்கள் அவ்வப்போது பாடியிருந்தாலும் அவற்றை நிரல்படத் தொகுத்தளித்தவர் பெரும்பற்றப்புலியூர் நம்பியே.

உ.வே.சா.இந்நூலை இருமுறை பதிப்பித்துள்ளார். அப்பதிப்புகளில் அவர் பொழிப்புரை தரவில்லையாயினும் அரிய செய்திகளைக் குறிப்புரையாகத் தந்துள்ளார். அக்குறிப்புரைகளை ஆதாரமாகக் கொண்டு இந்நூலாசிரியர் பொழிப்புரை வழங்கியுள்ளார்.

இந்நூல் மதுரையைப் பற்றிய தல புராண நூல்களுள் முதலாவது என்பது மட்டுமல்ல, தமிழில் எழுந்த முதல் புராண நூலும் இதுவேயாகும்.

மதுரையின் சிறப்பு குறித்தும், சொக்கநாதனின் பெருமை குறித்தும் காசி நகரில் இருந்த முனிவர்கள் அகத்தியரிடம் வினவ, அவர் உரைத்ததே “திருவிளையாடல் புராணம்’ என்று கூறுவர்.

தேவர்கள் முதல் விலங்கினங்கள் ஈறாக அனைத்து உயிரினங்களுக்கும் வேறுபாடு கருதாது அருளுபவர் சொக்கநாதர் என்றும், அவர் அருளைப் பெற இறைவன் மீது மாறாப் பற்றும், பிற உயிர்களிடத்து அன்பும் கொண்டிருந்தால் போதும் என்றும் இந்நூல் அறிவுறுத்துகிறது.

இந்நூலில் அடங்கியுள்ள 1753 விருத்தப் பாக்களுக்கு சீர் பிரித்து எளிய முறையில் உரை எழுதியுள்ளார் உரையாசிரியர். சில சொற்களுக்குப் பொருள் விளக்கமும் தரப்பட்டுள்ளது. நிறைவாக பாடல் முதற்குறிப்பகராதி உள்ளது.

தமிழில் முதன்முதலில் வெளியான புராண நூலுக்கு உரை இல்லை என்ற குறை இந்நூலின் உரையாசிரியரால் நீங்கியது. இவரின் தமிழ்த்தொண்டு போற்றுதலுக்குரியது.

நன்றி: தினமணி,25/10/21.


இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609


இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *