தூரமில்லை தொட்டுவிடலாம்

தூரமில்லை தொட்டுவிடலாம், முனைவர் பாபு புருஷோத்தமன், தினத்தந்தி பதிப்பகம், விலை 200ரூ.

தினத்தந்தியில் ஞாயிறுதோறும் வெளியாகும் குடும்ப மலரில் முனைவர் பாபு புருஷோத்தமன் எழுதி தொடர்ந்து 54 வாரங்கள் வெளிவந்த “துரமில்லை தொட்டுவிடலாம்” என்ற தன்னம்பிக்கை தொடரின் தொகுப்பே இந்த நூல்.

குடும்பம், கல்வி, அரசியல், பொருளாதாரம், கலை, வேலைவாய்ப்பு, பொழுதுபோக்கு, வாழ்வியல் நெறிமுறைகள் என அனைத்தும் அம்சங்களையும் கொண்டுள்ளது. “புண்படுத்தக்கூடாது பண்படுத்த வேண்டும், “கேலிக்கு வேண்டும் வேலி”, “பண்புகளை வளர்க்கும் பண்டிகைகள்”, “நல்ல பழக்கம் நம்மை உயர்த்தும்”, “இல்வாழ்க்கை இனிக்க”, “முதியவர்கள் அனுபவ பொக்கிஷங்கள்”, “சொந்தத் தொழிலே சொர்க்கம்”, “சோம்பலுக்கு விடை கொடுப்போம்”, “இயல்பாகவே அமையட்டும் இரக்கக் குணம்”, “போலிகவுரம் பொல்லாதது” என்பன போன்ற பல்வேறு தலைப்புகளில் சொல்லப்பட்ட கருத்துகள் விழுமியவை. அனைவராலும் விரும்பத்தக்கவை. பயனுள்ளவை.

உள்ளத்தைப் பண்படுத்தக்கூடியவை. “வெற்று வார்த்தைகளிலும் வெற்றி உண்டு. ப்ளீஸ், தேங்க்யூ, ஸாரி என்ற மும்மூர்த்திகள் நம் வசம் இருந்தால்… எந்த மொழியையும் கற்றுக் கொள்ள ஆர்வம் வேண்டும். ஆசை வேறு, ஆர்வம் வேறு.. திட்டமிட்டால் எல்லாப் பயணங்களும் இனிதாகவே முடியும். இன்றைய தேடுதலின் சுகத்தில் நாளைய வாழ்க்கையை இழந்து விடக்கூடாது, கோபத்தின் ஆபத்தை உணர்வோம், நிலையானது லட்சியங்களே, லட்சங்கள் அல்ல என்ற உண்மையை இளைஞர்கள் மனதில் பதிய வைப்போம், எதிர்காலம் என்பது வாய்ப்புகள் நிறைந்த கடல், எந்தத் திசையிலும் செல்லலாம், எந்த நிலையிலும் வெல்லலாம், ஆர்வம், திறமை, உழைப்பு இருந்தால்…” என்பன போன்ற நல்லொழுக்க கருத்துக்களைப் பக்கத்துக்குப் பக்கம் விதைத்துள்ளார்.

புத்திசாலித்தனத்தை உருவாக்கும் அருமையான கருத்துக் களஞ்சியம். மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இவரது எழுத்துகள் ஒளி காட்டி வழிகாட்டும் கலங்கரை விளக்கங்களாக விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஒவ்வொருவரும் படித்துப் பின்பற்றக்கூடியது, உங்கள் பிள்ளைகளுக்குப் பரிசளிக்க தகுதியானது.

நன்றி: தினத்தந்தி, 5/10/2016,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *