யாருமற்ற கடற்கரை உரையாடல்
யாருமற்ற கடற்கரை உரையாடல், மிதக்கும் யானை, ராஜா சந்திரசேகர், சந்தியா பதிப்பகம், விலை: ரூ. 140.
மிலன் குந்தேராவின் சொற்களில், ‘நாவல் என்பது ஆசிரியரின் வாக்குமூலம் அல்ல; எலிப்பொறியாக மாறிவிட்ட இன்றைய உலகத்தில், மனித வாழ்க்கை மீதான விசாரணை’. துளி அமுதமும் நிறைய விஷமுமாக இறங்கிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கையின் மீதான விசாரணையாக விரிகிறது சுனில் கிருஷ்ணனின் முதல் நாவல் ‘நீலகண்டம்’.
காதல் திருமணம், குழந்தைக்கான தவிப்பு, பெண் குழந்தையைத் தத்தெடுப்பது, ஆட்டிஸம் பாதித்த அந்தக் குழந்தையை வளர்ப்பதன் துயர சாகசம் – இதையெல்லாம் ஒற்றை வரிசையில் அல்லாமல் பல்வேறு முனைகளில், பல்வேறு குரல்களில் இன்றைய வாழ்க்கையை விசாரணை செய்கிறது இந்நாவல்.
யதார்த்தமும் புனைவும் வெவ்வேறு விகிதங்களில் அளந்து தரப்படுகிறது இங்கு. அதுவே குழந்தை வருவினுடைய சிக்கலான உள் உலகத்தை நம் முன் விரித்துக்கொடுக்க உதவுகிறது. நிலையில்லாத எழுச்சிகொண்ட, அதேசமயம் சுயபரிசீலனை செய்யக்கூடிய இன்றைய இளைஞனான செந்திலும், எதிர்நிலைப் பண்புகொண்ட ஹரியும் அவரவருக்கான உருவத்தைச் சரியாகவே பெற்றிருக்கிறார்கள்.
தொலைந்துபோன குழந்தை வருவைத் தேடுதலும் கண்டடைதலும் நாவலை வேறொரு அர்த்தத் தளத்துக்கு எடுத்துச் செல்கின்றன. சுடலைமாடன் – மெடியா – கலீல் ஜிப்ரான் இடம்பெறும் பகுதியில் இறுதியில் இயல்பாக உருவாகியுள்ள பகடியை ரசிக்கும்போதே, மெடியாவும் சுடலைமாடனும் ஒட்டாமல் தனித்துத் திரிவதன் உறுத்தலையும் உணர முடிகிறது.
– ந.ஜயபாஸ்கரன்
நன்றி: தமிழ் இந்து
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818