நமது நடிப்புக்கலை செல்வங்கள்
நமது நடிப்புக்கலை செல்வங்கள், திருக்குடந்தை பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
சிறந்த டைரக்டரும், பட அதிபருமான முக்தா சீனிவாசன், சினிமா பற்றி புத்தகங்கள் எழுதி வருகிறார். இப்போது நமது நடிப்புக்கலை செல்வங்கள் பாகம் 1 என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முதல் பொற்காலத்தை உருவாக்கிய நடிகர் நடிகைகள் பற்றிய, சுருக்கமான வாழ்க்கை வரலாறுகள் இடம் பெற்றுள்ளன. லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அடைந்த பாகவதரும், என்.எஸ். கிருஷ்ணனும் லண்டனில் இருந்த பிரிவி கவுன்சிலுக்கு (வெள்ளையர் ஆட்சியின்போதுஇதுதான் உச்சநீதிமன்றம்) மெர்சி பெட்டிஷன் (கருணை மனு) போட்டு விடுதலையானார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது தவறு. நடந்தது என்னவென்றால் பாகவதருக்கும், கிருஷ்ணனுக்கும் சென்னை செசன்சு கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டதில் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதை எதிர்த்து பாகவதரும், கிருஷ்ணனும், பிரிவிகவுன்சிலில் அப்பீல் செய்தனர். சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை சரியானபடி விசாரிக்கவில்லை. எனவே மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று பிரிவி கவுன்சில் உத்தரவிட்டது. அதன்படி வழக்கை சென்னை ஐகோர்ட் மீண்டும் விசாரித்தது. பாகவதர், கிருஷ்ணன் ஆகியோர் சார்பில் பிரபல வழக்கறிஞர் வி.எல். எத்திராஜ் வாதாடினார். பாகவதரும், கிருஷ்ணனும் நிரபராதிகள் என்று கூறி, அவர்களை விடுதலை செய்து 25/4/1947 அன்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. அதைதொடர்ந்து, சென்னை மத்திய சிறையில் இருந்து பாகவதரும், கிருஷ்ணனும் விடுதலை ஆனார்கள். இதுதான் நடந்தது. நன்றி: தினத்தந்தி, 22/4/2015.