அகமும் புறமும்
அகமும் புறமும் (தமிழ்நேயம் இதழிலிருந்து), கோவை ஞானி, புதுப்புனல், சென்னை 5, பக். 256,விலை 200ரூ.
கோவை ஞானி நடத்தி வரும் தமிழ்நேயம் இதழில் வெளியான அகமும் புறமும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமூகத்தின் அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் கோவை ஞானியின் எதிர்வினைகள், கவலைகள், கோபம், நம்பிக்கை, மகிழ்ச்சி எல்லாவற்றின் கலவைதான் அகமும் புறமும். இந்தத் தொகுப்பில் இடம்பெறுபவை 2005க்கு முந்தைய கட்டுரைகள் என்றாலும், அவர் குறிப்பிட்டுள்ள பிரச்னைகள் இன்றும் இருக்கின்றன.முன்னிலும் அதிகமாகி இருக்கின்றனவே தவிர, மறைந்துவிடவில்லை. ஒவ்வொரு பிரச்னையையும் அவர் அணுகும் விதம், நீறுபூத்த சிந்தனைக்கு ஊதுகுழல். அவரை சந்தித்துப் பேசியிருக்காதவர்களுக்கு இது அச்சுப்புத்தகம். அவரிடம் நேரில் பேசியிருப்பவர்களுக்கு இது ஒரு பேசும் புத்தகம். கோவை ஞானி சொல்லச் சொல்ல உதவியாளர் எழுதுகிறார். அச்சில் வருகிறது. அவருடன் பேசிப் பழகியவர்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது ஞானி அதே ஏற்ற இறக்கங்களுடன் நம்முன் பேசுவதை உணர முடியும். நன்றி: தினமணி, 26/8/2013.
—-
சமூகநீதிக்காவலர் டபிள்யு பி. ஏ. சவுந்திர பாண்டியன், குலசேகரப்பாண்டியன், சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-868-9.html
அஞ்சா நெஞ்சர் என்றும் அச்சம் அகற்றிய அண்ணல் என்றும் போற்றப்பட்ட டபிள்யு பி.ஏ.சவுந்திரபாண்டியனார் வாழ்க்கை வரலாற்று நூலான இதில் அவர் நீதிக்கட்சியிலும், சுயமரியாதை இயக்கத்திலும் சேர்ந்து பொதுப்பணி ஆற்றிய விவரங்கள் ஏராளமாக கூறப்பட்டுள்ளன. தாலி கட்டாமல் திருமணம் செய்வித்து ஊக்குவித்தது. பெண்கள் உரிமைக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபட்டது, ஏழை மக்கள் உரிமைக்கும், வசதிக்கும் போராடியது ஆகியவற்றையெல்லாம் விவரமாக விளக்குகிறது இந்நூல். நமது இறுதி மூச்சு வரை சுயமரியாதை இயக்க நெறிகளை பரப்பி வந்தவர். சமூதாய சீர்திருத்தவாதி. பெரியாரின் வலதுகரமாக விளங்கியவர் சவுந்தரபாண்டியன்ர். தமிழர்கள் அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு. சிறந்த நூலாக வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 12/9/2012.