ஆன்மிக, சமய இலக்கியக் கட்டுரைகள்
ஆன்மிக, சமய இலக்கியக் கட்டுரைகள், எஸ். சாய்ராமன், பூங்கொடி பதிப்பகம், சென்னை 4, பக். 200, விலை 100ரூ.
இந்நூலில் உள்ள அருணகிரிப் புராணமும் அருணாசலப் புராணமும் என்ற கட்டுரை, அருணாசல தல வரலாறு குறித்து சிறப்பாக விவரிக்கிறது. வானவரும் வாசகரும் என்ற கட்டுரையில் மாணிக்கவாசகருக்கும் சிவபெருமானுக்கும் இடையிலான உரையாடல் ரசிக்கும்படி உள்ளது. அந்தந்தக் கால மக்களின் நாட்டின் நாகரிகம், பண்பாடு, மரபு இவற்றையெல்லாம் இணைத்துக்கொண்டு வற்றாத நீரோட்டமாகப் பாய்ந்து இக்கால மக்களையும் வளப்படுத்துவதுதான் இலக்கியம். ஆதலின் இலக்கியம் காலத்தால் அழியாமல் என்றும் நிலைபெற்றிருக்கும் செல்வமாகும் என்று புறநானூற்றில் ஓர் உண்மைப் பாடம் என்கிற கட்டுரையில் இலக்கியத்துக்கு அருமையான விளக்கம் தரப்பட்டுள்ளது. மார்கழியின் மகிமை பற்றி மற்றொரு கட்டுரை எடுத்துரைக்கிறது. தெய்வம் இகழேல் என்னும் நன்மொழியைப் பொன்மொழியாகப் போற்றியவர் அருணகிரி. கணபதியைப் புகழுமிடத்தோ, சிவபிரானை தோத்திரம் சொல்லுமிடத்தோ, தேவியைச் சிறப்பிக்கும் இடத்தோ, திருமாலைப் போற்றுமிடத்தோ அருணகிரி வாக்கின் அழகுக்க இணையான பகுதி மேற்சொன்ன கடவுளரைத் தனிமுறையிற் போற்றும் நூல்களிடத்தும் காண்டலரிது என்று ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆன்மிக, சமய இலக்கியவாதிகளுக்கு இனிமை தரக்கூடியது இந்நூல். நன்றி: தினமணி, 25/11/13.
—-
துக்காரம், பால சந்திரா நெமதே, தமிழாக்கம் ஆர்.கே. நாகு, சாகித்ய அகடமி, குணா பில்டிங்ஸ், தேனாம்பேட்டை, சென்னை 600018, பக். 136, விலை ரூ.50.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பக்தி நெறியைப் பரப்பியவர்களில் மிக முக்கியமானவர் துக்காராம் 13ம் நூற்றாண்டில் தோன்றிய வரகரி இயக்கத்தின் மிக முக்கியமான அங்கமாக திகழ்ந்தவர். ஜாதிப் பாகுபாடுகளை ஏற்காமல், எல்லாரும் சமம் என்ற கோட்பாட்டை கொண்டது இந்த இயக்கம். அப்போது மித மிஞ்சிய ஆணவப்போக்கோடு இருந்த பிராமணீயத்தை சரிக்கட்டும் மாற்றுச் சக்தியாய் இயங்கிய வாகரி இயக்கத்தை லட்சக்கணக்கான மக்களிடையே பரப்பியவர் துக்காராம். அவர் ஒரு அருட்கவி. அவரது வாழ்க்கை வரலாறு, தங்கு தடையற்ற அருமையான தமிழ் மொழி பெயர்ப்பில் வெளியிடப்பட்டுள்ளது. -மயிலை சிவா. நன்றி: தினமலர், 9/10/13.