இசைஞானி இளையராஜாவின் பால் நிலாப்பாதை
பால் நிலாப்பாதை, இசைஞானி இளையராஜா, குமுதம் பு(து)த்தகம், பக். 208, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-373-6.html
திரையுலகில் இசைஞானியின் வெற்றிகளும், சாதனைகளும் அற்புதமானவை. ஆச்சரியப்பட வைப்பவை. அவருடைய வாழ்க்கைப் பயணம், கிராமத்துப் புழுதி மண்ணில் துவங்கி, உலகெங்கிலும் சுற்றி வருகிறது. அவரது இசைப் புகழோ ககனப் பெருவெளியெங்கும் காற்றுப் போல பரவி, வியாபித்திருக்கிறது. வாழக்கை, தொழில் சார்ந்த அனுபவங்களைத் தாண்டி அவருடைய ஆன்மிக அனுபவங்களும், நம்மை அவரருகே கொண்டு வந்து நிறுத்தி, அவரை அண்ணாந்து பார்க்க வைக்கிறது. அவரது வாழ்க்கை அனுபவக் குறிப்புகள் அடங்கிய இந்த நூல் முழுவதும் இயல்பான பாசாங்கில்லாத நடையில் எழுதப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பு. இசையில் மட்டுமல்ல, எழுதுவதிலும் ஞானிதான் இந்த இளையராஜா. நிறைய ஆங்கிலச் சொற்கள், தவிர்க்கவே முடியாத நிலையில். இருந்தாலும் என்ன, இசைஞானியின் இதயத்திலிருந்தல்லவா, இந்த பால் நிலாப் பாதை ஆரம்பமாகிறது. யதார்த்தத்தில் உச்ச கட்ட படைப்பு. -ஜனகன்.
—-
காலச்சுவடுகள், நவீன், தமிழாக்கம்-இளம்பாரதி, சாகித்ய அகடமி, குணா பில்டிங், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600018, பக். 1045, விலை 545ரூ.
ஆனந்த பரவசம் அடைய விரும்புவோர், இந்த நாவலைப் படிக்கலாம். வளர்பிறை, தேய்பிறையை மட்டும் பார்த்தவர்கள், பவுர்ணமி நிலவைப் பார்ப்பதைப் போன்ற பரிபூரண இலக்கிய இன்பத்தைக் கொடுக்கும் நாவல். இந்நூலின் முதல் 200 பக்கங்களில் இந்த நவீன் எவ்வளவு விஷயங்களைத் திணித்திருக்கிறார் என்ற ஆச்சரியம் வரும். முழு நாவலையும் படித்து முடித்ததும் சிலிர்த்துப் போவோம். இது ஒரு மகாபாரதம். 1944 முதல் 1956 வரையிலான காலகட்டத்தில், ஆந்திரா தெலுங்கானா பகுதியின் வரலாற்றை நவீன் கலை அழகுறச் சொல்லி செல்கிறார். மூல நூலின் சுவை குன்றாமல் சரளமான தமிழில் மொழி பெயர்த்திருக்கிறரும் இளம் பாரதி பாராட்டுக்குரியவர். -எஸ். குரு. நன்றி: தினமலர், 10/11/2013.
