ஏமாறும் கலை
ஏமாறும் கலை, யுவன் சந்திரசேகர், காலச்சுவடு, 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, பக். 240, விலை-190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-5.html
நவீன இலக்கியத்தில் புதிய கதை சொல்லியாக இருக்கிறார் யுவன் சந்திர சேகர். சும்மா பம்மாத்துப் பண்ணாமல் சக பயணி போன்றே நம்முடன் பயணிக்கிறது இச்சிறுகதை தொகுப்பு. மொத்தம் 12 சிறுகதைகள். கதை, கதைகளுக்குள் கதை, அதில் மற்றொரு கதை என்று பல படிம வெரைட்டிகளைத் தந்திருக்கிறார். சுவையான வாசிப்பனுபவம் கிடைக்கிறது. சிறுகதைத் தொகுப்பு என்றாலும் ஒவ்வொரு கதையும் சிறு இழையில் தொடர்பு கொண்டே சொல்லப்படுகிறது. அதனதன் பிணைப்பை மிக எளிதாக நமக்குள் கொண்டு வந்துவிடுகிறார் கதையாசிரியர். உதாரணமாக ஒரு கதை. வங்கியில் தொடர்ந்து பணம் கட்டவரும் பெண்மணி, தனது கணவருக்கு இரண்டு காலும் கிடையாது. அவரை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வந்திருக்கிறேன் என்று கேஷியரிடம் சொல்லி கியூவில் நிற்காமல் பணம் கட்ட அனுமதி வாங்கிவிடுகிறார். அந்த வங்கியின் கேஷியரும் பரிதாபப்பட்டு அனுமதித்து தந்துவிடுகிறார். ஒரு திருமண விருந்தில் அதே பெண்மணியை கேஷியர் பார்க்க நேரிடுகிறது. கூடவே அவரது ஆஜானுபாகுவான கணவருடன், அவர் முழு காலுடன் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். இதைப் பார்த்ததும் கேஷியருக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது. அவர்கள் பார்வையில் படாமல் ஒதுங்கிக் கொள்ளும் அவர், சை இந்த அம்மாள் நம்மள இப்படி ஏமாத்திட்டாளே என்று குமைந்து போகிறார். நாளைக்கு வரட்டும் நாக்கை பிடுங்கிக்கிறமாதிரி கேள்வி கேக்கிறேன் என்று நினைத்துக் கொள்கிறார். இதை அவரது ரயில் சினேகிதரிடம் பகிர்ந்து கொள்ள, அவரோ அந்தப் பெண்மணிடம் எதுவும் கேட்காதீர்கள், அவர்கள் வந்தாலும் ஒண்ணும் தெரியாத மாதிரியே சர்வீஸ் பண்ணுங்க. விஷயம் தெரியாதது மாதிரியே நடந்துக்குங்க. உங்களுக்கு விஷயம் தெரியும்ன்னு அவங்களுக்குத் தெரியாதே, இப்ப ஏமாந்தது யாரு சொல்லுங்க… என்றார். ஏமாற்றும் கலை தெரிந்தால் மட்டுமே இவ்வுலகில் ஏமாறாமல் தப்பிக்கலாம். இப்படிப்பட்ட சுவையான சிறுகதைகளின் தொகுப்பு இந்நல். நன்றி: தினமணி, 13/5/2013.
—-
ஸ்ரீமத் பகவத் கீதை, மொழிபெயர்ப்பு-சுவாமி ஆசுதோஷானந்தர், தலைவர். ஸ்ரீராம கிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை 4, பக். 768, விலை 100ரூ.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அருளிச் செய்த ஸ்ரீமத் பகவத்கீதைக்கு, பலர் உரைகள் எழுதியுள்ளனர். படிக்கப் படிக்கத் தெவிட்டாத பல நல்ல சிந்தனைகளை தருவதுதான், பகவத் கீதைக்குள்ள பெருமை. தேசத் தந்தை காந்தி விரும்பி படித்து நூல்களில் தலையாயது பகவத் கீதை. நம் சிந்தனைகளை நேராக்கி, கூராக்கி, வெற்றிகரமான வாழ்க்கை பாதை அமைக்கும் இந்நூலிற்கு, சுவாமி ஆசுதோஷானந்தர் மிக, மிக எளிய பொருளியல் விளக்கம் தந்துள்ளார். கையடக்கப்பதிப்பாக இருப்பதும், தடித்த எழுத்துக்களில் தவறின்றி, அச்சு செய்யப்பட்டுள்ளதும், நல்லதாளும், கட்டுமானமும் நூலிற்குப் பெருமை சேர்க்கின்றன. அனைவரும் வாங்கிப் படித்து பயன் பெறலாம். -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 25/12/2011