கருநாவு

கருநாவு, ஆழியாள், மாற்று வெளியீடு, சென்னை, விலை 60ரூ.

‘எங்கள் நாள் வரும்’ ஈழத் தமிழப் பெண் கவிஞர் ஆழியாளின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு ‘கருநாவு’. இரண்டாம் தொகுப்பு வெளிவந்து ஆறு ஆண்டுகள் கழித்து வெளிவந்திருக்கிறது இந்தத் தொகுப்பு. கனவிலும் நனவிலும் சதா தன்னைப் பின்தொடர்ந்தவற்றுக்கு இந்தத் தொகுப்பின் வாயிலாக வரிவடிவம் கொடுத்திருப்பதாக ஆழியாள் குறிப்பிடுகிறார். ஆழியாள் மொழிபெயர்த்த ஆஸ்திரேலியக் கவிஞர்களின் கவிதைகளும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. வாழ்வு குறித்து இந்த உலகம் கட்டமைத்திருக்கும் பிம்பங்களைக் கேள்விக்குட்படுத்துகிறார் ஆழியாள். பிறப்பின் பொருள் என்ன? பொருளீட்டுவதும், பிள்ளை பெறுவதும், ஓய்வெடுப்பதும் மட்டும்தானா? அந்த வரை படத்தை மாற்றுவதற்கான வழிகளை நோக்கி மர்ம முறுவலுடன் நீள்கின்றன இவரது கவிதைகள். காற்றையும் வெளிச்சத்தையும் மழையையும் உட்புகாமல் அடைத்துவைக்கிற சதுர வடிவ வீடுகளைத் தவிர்த்து, வட்ட வடிவ வீட்டைக் கேட்கிறார் ஆழியாள். தன் தாய்நாட்டின் நிலையையும் தம் மக்களின் வலிமையையும் இவர் பதிவு செய்திருக்கிறார். ஆனால், இவரது பார்வையும் கோணமும் வேறு. மணிக்கூண்டு கோபுரத்துக்குக் கீழே வீசப்பட்ட செல்லம்மா பாட்டியும் இயக்கத்துக்குப் போனவர்களும், காணாமல் போனவர்களும் ஷெல் வெடிச் சத்தங்களினூடே முகம் காட்டிச் செல்கிறார்கள். முள்வேலிக் கம்பிகளுக்குப் பின்னால் கண்ணாமூச்சி ஆடும் குழந்தைகளை அத்தனை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியுமா என்று தெரியவில்லை. உதவி கேட்டு உயர்ந்த விரல்களை ஆறுதலாகக்கூடப் பற்றிக்கொள்ளாமல் வேடிக்கை பார்த்தவர்களை நிந்திக்கவில்லை. தங்களை முற்றிலும் கைவிடச் சொல்லிப் பேரானந்தப்படுகிறார், எங்கள் நாள் வரும் என்ற நம்பிக்கையுடன். -பிருந்தா. நன்றி: தமிழ் இந்து, 21/3/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *