காற்றின் பாடல்

காற்றின் பாடல், கலாப்ரியா, புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை, பக். 128, விலை 140ரூ.

காற்றில் கரையாத பாடல் காற்று அடித்துக்கொண்டு போக, காலப்போக்கில் சருகுகள் மட்கி, உள்ளிருந்து அரிக்கும் என்றும் மரிக்காத ஓர்மைகள் இவை. வேட்டி மடிப்பிலிருந்து இவை விபூதியை எடுத்து எதிர்வந்த அம்மாவிடம் கொடுத்தேன். எப்பொழுதும் அம்மா, முருகா என்றபடி திருநீறு பூசிக் கொள்வாள். அதையும் அன்று சொன்னாளா இல்லையா? எதுவும் நினைவில்லை. சொல்லி இருக்கலாம். அவள் வாய் திறந்து சொல்கிற ஒன்றிரண்டு அபூர்வ வார்த்தைகளில் அதுவும் ஒன்று. மிச்சமெல்லாம் சொல்லாதவை. -காற்றின் பாடல், பக். 241. நடு இரவில் தல்லாகுளத்தில் போர் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். மனிதர்களின் உறக்கத்தோடும் கனவுகளோடும் எந்திரம் கதைத்துக்கொண்டு இருக்கிறது. யாரோ சொல்கிறார்கள் காலைக்குள்ள 500 அடி போயிரும். தண்ணீர் வருதானு பார்ப்போம். இந்த கோடைக் காலத்தில் நொறுங்கும் பாறைகளின் வழி இயற்கை விடாது தன் ரௌத்திரத்தைக் காட்டிக்கொண்டு இருக்கிறது. 500, 600, 700 என எத்தனை அடிகள் தோண்டினாலும் தண்ணீர் இல்லை. ஏறக்குறைய தமிழ் கதை வெளியும் அப்படித்தான் இருக்கிறது. 500,600,700 அடி என தோண்டி படைப்பாளிகள் வெறும் சல்லிகளைப் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். நீர் வந்தால்தானே பச்சை துளிர்க்கும் வெறும் தூர்ந்த துளைகளாக இருக்கின்றன நம் கதைவெளிகள். சிறுவர் சிறுமியர் அறியாது வீழ்ந்து 3 நாட்கள் போராடி உயிர் விடுவதற்கான ஏற்பாடாயிருக்கிறது. பின்னிரவுகளில் அத்துளைகளிலிருந்து வெற்று ஊளைகள் எழுகின்றன. கலாப்ரியா பத்து வருடங்களுக்கு முன்னால் உரைநடைக்கு வருகிறார். கலாப்ரியாவின் பலம், அவருக்கு சொல்வதற்கு ஏராளமாக இருக்கிறது. அதை கலை நேர்த்தியுடன் சொல்ல முடிகிறது. தோண்டிய உடனேயே அவரது அனுபவ ஊற்றிலிருந்து நீர் பெருகி வருகிறது. விதவிதமான மாந்தர்கள், அனுபவங்கள், சத்தன பொதிகையின் தென்றல் என பெண்ணாள் என்ற ஒரே பாடலை மட்டும் எழுதிய கிருஷ்ண மூர்த்தி, தா.மணி, கடலை நிறுத்தும் கேரள செண்டை மேளக்காரர்கள், ரீபிலில் தொலைந்து போன பேனா ரிப்பேர் செய்பவர், பேச்சாளன் பிரமு, சாவதற்கு சயனைடும் மறுக்கப்பட்ட ஆகாரிகள், சபரிமலை பொதி சுமக்கும் காக்கையன், நாற்பது வருடங்களுக்கு முன்னால் அனாதையாக கிடக்கும் சபரிமலை, திருநெல்வேலியிலிருந்த உப்பும் அல்வாவும் வருவதற்காக காத்திருக்கும் அய்யப்பன் கோவில் மேல் சாந்திகள், அப்பாவின் சிநேகிதர்கள், சிந்திய உப்பைத் தேதடி ஓடிவரும் யானைகள், தூணுக்குகள் மறைந்துபோன ஆச்சிகள், ரகசியம் காக்க நாக்கை அறுத்துக்கொண்ட அண்ணாச்சி, தங்கபஸ்பம் தேடி அலையும் நிலக்கிழார்கள், இப்படி மனிதர்கள், மனிதர்கள்… இந்த ஞாபகத் தொடரின் 20 அத்தியாயங்களில் 10 நல்ல சிறுகதைகள் ஒளிந்திருக்கின்றன. சபரிமலை அத்தியாயத்தை தனியாக ஒரு திரைப்படமாக எடுக்கலாம். கலாப்ரியாவுக்குள் எப்பொழுதும் ஒரு சினிமாக்காரன் இருக்கிறான். ஒரு நிகழ்வை அதற்கான ஒளியோடு, காட்சி கோணத்தோடு, பின்னணி சப்தங்களோடு அதன் வண்ணத்தோடு நமக்கு கலாப்ரியா காட்சிரூபமாய் கையளிக்கிறார். வரிகளுக்கிடையே வாசிப்பவர்களுக்கு ஏராளமான கண்ணிவெடிகளை நாம் கண்டடையும்போது சேதாரங்கள் எதுவும் விளையாமல் சிறகு முளைக்கவே வைக்கிறார். கலாப்ரியா சினிமா உலகத்திற்குப் போயிருக்க வேண்டும் (இனியும் போகலாம்தான்). அவருடைய நினைவின் தாழ்வாரங்கள், ஓடும் நதி, உருள் பெரும் தேர் ஆகிய முத்தொகுப்பின் (Trilogy) தொடர்ச்சியாக, இதை வாசிக்கலாம். ஒரு கவிஞன் உரைநடைக்கு வரும்போது அவர் தொட்டதெல்லாம் பொன்னாகும் மைதாஸ் விரல்களோடு வருகிறான். அவனுக்கு எதைத் தொடவேண்டும் என்று மாத்திரம் தெரிந்திருக்க வேண்டும், கவிதையிலிருந்து உரைநடைக்கு வருகின்றவர்கள் பெரும்பாலும் வெல்கிறார்கள். உரை நடையிலிருந்து கவிதைக்கு மேலேறுபவர்கள் சோபிப்தில்லை. கலாப்ரியாவின் பலம், அவருக்கு எதைத் தொடவேண்டும் என்று தெரிந்திருக்கிறது. காற்றில் பாடல்கள் கரைவதாய் சொல்வது எப்பொழுதும் நம் வழக்கம். ஓர்மையின் பாடல்கள் ஒரு பொழுதும் அழிவதில்லை. அது நம்மை கைவிடுவதில்லை. விட்டு விலகுவதும் இல்லை. கர்த்தனுக்கு முன்பிருந்தே. நன்றி: இந்தியா டுடே, 7/5/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *