குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல்
குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல், புலமை வெங்கடாசலம், தாமரை பப்ளிகேஷன்ஸ்.
குற்றங்களை துப்பறிவதற்கு மருத்தவர்கள் உதவியாக இருந்தாலும், உண்மையை மூடிமறைப்பது உடல் அழுகிவிடுவது போன்ற பல காரணங்களால் துப்பறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதையும் கடந்து, ரத்தக்கறை, உமிழ்நீர் கறை, சிறுநீர் கறை, சோப்பு துகள்கள், மாவு, கரித்தூள், முடி, பூவில் உள்ள மரகத பொடி, மரக்கட்டை, சுருட்டு, பீடி, சிகரெட் சாம்பல் மற்றும் சிதைந்த காயம், வீக்கங்கள், துப்பாக்கியால் ஏற்படும் காயங்கள் போன்ற தடயங்களை கொண்டு எப்படி போலீசார் துப்பு துலக்குகின்றனர் என்பதை விளக்குவதுதான் இந்த புத்தகம். அதை போலீசார், வழக்கறிஞர்கள் அதிகம் தெரிந்து வைத்திருப்பர். ஆனால், பொதுமக்களும் தெரிந்துகொள்ளும்வகையில் இந்த புத்தகத்தில் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. மொத்தம் 118 பக்கங்களை கொண்ட இந்த புத்தகம், ஆலந்தூர் எம்.கே.என். சாலை நூலகத்தில் வாசிக்க கிடைக்கிறது. நன்றி: தினமலர், 20/7/2014.
—-
ஏ டேல் ஆஃப் ஷேக்கன் பெயித், மன்மோகன் சர்மா, திரிசூல் பப்ளிகேஷன்ஸ், நொய்டா, பக். 378, விலை 793ரூ.
நேரு காட்டிய சலுகை இந்திய ராணுவத்தில், பிரிகேடியராக பணியாற்றிய நூலாசிரியர், தம் வாழ்க்கை வரலாற்றூடே, தம் பணிக்கால நிகழ்வுகளை தொகுத்து தந்துள்ளார். அதனால், இந்த நூல், தன் வரலாற்றின் ஒரு பகுதியாகவே கருதத்தக்கது. எனினும் தகவல்கள், அதிர்ச்சி தரத்தக்கவை. இருபத்தாறு தலைப்புகள் கொண்ட இந்த நூலின், ராணுவத்தில் பணிபுரியும் அதிகாரிகள், உறவினர்களுக்கு காட்டும் சலுகைக்ள், நேரு காலத்தில் இருந்தே வந்திருப்பது சுட்டிக் காட்டப்படுகிறது. நேருவின் உறவினரான மேஜர் ஜெனரல் பிரிஜ் மோகன் கலுக்கு நேரு காட்டிய சலுகையின் பேரில் கிடைத்த பதவி உயர்வு, விதிக்கு மாறான முறையில் செய்யப்பட்டது என்பதை நூலாசிரியர் எடுத்தக்காட்டுகிறார். பிரிட்டிஷ் ஆட்சியில், சீக்கியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நிகழ்ந்த போர், அதில் மடிந்த தியாகிகள் (பக். 53-55), கே.சி.பந்த், ராணுவ அமைச்சராக இருந்த காலகட்டத்தில், நடந்த சீர்கேடுகள், லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி அமர்த்தல் (பக். 66-68), இலங்கையில் ஐ.பி.கே.எப்., செயல்பட்டவிதம், அது தொடர்பான ராஜீவின் செயல்பாடு, பிரபாகரன் பற்றிய தகவல், தமிழ் ஈழம் பற்றிய செய்திகளை தாங்கிய ஆங்கில நூலினை திருட்டுத்தனமாக வெளியிட்ட செய்திகள் (பக். 245, 235, 237) ஆகியவை, இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. இவை தவிர, நூலாசிரியர், முன்னாள் ராணுவ அமைச்சர் கே.சி.பந்த், ராணுவதுறை, ராணுவ தலைமையகம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்தது, தமக்கு முறையாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்காததால் அதுகுறித்து வழக்கு தொடுத்தது, கவுகாத்தி நீதிமன்றம், உச்சநீதிமன்றம் (பக். 103-105, 147-149) இந்திய மற்றும் கிழக்கு மாநில பகுதியின் செய்திதுறை, பார்லிமென்ட் ஆகியவற்றால் தமக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் விரிவாக தெரிவித்துள்ளார். -இராம. குருநாதன். நன்றி: தினமலர், 20/7/2014.