கொங்கு நாட்டில் தாமஸ் மன்றோ
கொங்கு நாட்டில் தாமஸ் மன்றோ, ஆசிரியர் : இடைப்பாடி அமுதன், வெளியீடு: அனுராதா பதிப்பகம், 9, ஜலகண்டாபுரம் ரோடு, இடைப்பாடி – 637 101, சேலம் மாவட்டம், பக்கம் 304, விலை: 145 ரூ.
சென்னை அண்ணா சாலையில், தீவுத்திடல் எதிரே பிரமாண்டமான குதிரை மீது ஒரு வெள்ளைக்காரர் அமர்ந்திருக்கும் சிலை கம்பீரமாகக் காட்சியளிப்பதை, பலரும் பார்த்திருப்பர். சென்னை என்றவுடன், ஓர் அடையாளமாக இச்சிலை நினைவுக்கு வரும். ஆனால், அந்த மன்றோ துரை யார்? அவர் தமிழகத்தில், அதுவும் கொங்கு நாட்டில் எவ்வளவு அரும் பணிகள் ஆற்றியுள்ளார் என்பதையெல்லாம் இந்த நூல் விரிவாக நமக்கு எடுத்துரைக்கிறது. 1780 ல் பழைய மெட்ராஸ் நகருக்கு ஒரு சாதாரண வெள்ளைக்கார ராணுவ சிப்பாயாக வந்து இறங்கிய மன்றோ, தமது அயராத உழைப்பாலும், அறிவாற்றலாலும் எத்தகு உயரிய நிலைகளையெல்லாம் அடைந்து, இந்த தென்னிந்தியாவுக்கே கவர்னராக ஆனவர். வியக்க வைக்கும் சாதனையாளர் மன்றோ பிரபு. 47 ஆண்டுகள் நம் மண்ணுக்காக உழைத்த எளிய மக்களோடும் இணங்கிப் பழகிய விவசாய, கைத்தொழில்களை ஊக்குவித்த அந்தப்பெருமகனுடைய உயரிய பண்புநலன்களை இதில் காணலாம். அவர் கம்பங்கூழ் சாப்பிட்டதையும், வாழைக்காய் பஜ்ஜியை சுவைத்த தகவலும் உண்டு. குளத்தில் தோள்வரை மறைக்கும் வகையில் ஆடையுடன் பெண்கள் குளிப்பதையும், அப்போது எந்த ஆடவரும் சீண்டாமல் இருக்கும் நம் மரபை வியந்துள்ளார் மன்றோ.வரலாற்று விரும்பிகள் மட்டுமல்லாது, இன்றைய ஆட்சியாளர்கள் சகலரும் கற்றறிய வேண்டிய நூல் இது. -கவுதம நீலாம்பரன் (நன்றி: தினமலர், 8-4-2012)