சட்டமன்றத்தில் திருமாவளவன்
சட்டமன்றத்தில் திருமாவளவன், தொல். திருமாவளவன், தொகுப்பாசிரியர் பூவிழியன், கரிசல் பதிப்பகம், ஆர்62, 2வது நிழற்சாலை, த.நா.வீ.வா. குடியிருப்பு, வேளச்சேரி, சென்னை 42, விலை 200ரூ.
2001ம் ஆண்டு மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சட்டசபையில் பேசிய உரைகள், விவாதங்கள், கட்டுரைகள் போன்றவை 240 பக்கங்களில் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைக் குரலாய், போர்க்குரலாய் சட்டமன்றத்தில் நூலாசிரியர் தன் குரலை பதிவு செய்துள்ளார். அத்துடன் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக சட்டசபையில் நூலாசிரியர் கோபமாக பேசியதையும், கோரிக்கைகளை எடுத்து கூறியதையும் நூல் மூலம் அறிய முடிகிறது. சட்டசபையில் ஜனநாயகம், கனவுகள், கற்பனைகள், காகிதங்கள் போன்ற தலைப்புகளில் கட்டுரைகளை இணைத்திருப்பது மேலும் நூலுக்குச் சிறப்பை தருகிறது.
—-
இன்றைய ஊடகங்களின் செயல்பாடும் கடமையும், கி. கார்த்திகேயன், மணிமேகலை பிரசுரம், தணிகாசலம் சாலை, சென்னை 17, விலை 90ரூ.
தொலைக்காட்சி, செல்போன், பத்திரிகைகள் போன்ற ஊடகங்கள் மனித வாழ்வில் இரண்டற கலந்துவிட்டன. இவற்றால் ஏற்படும் நன்மைகள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் மிகப்பெரிய ஆபத்தும் ஒளிந்திருப்பது மறுக்க முடியாத உண்மை. அவ்வாறு ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைத்து, இளைய சமூகத்துக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது இந்நூல்.
—-
பெற்றோர் முதியோர் பராமரிப்பு சட்டம் மற்றும் விதிகள், கிரிலா ஹவுஸ், 55ஏ, 314, செரி ரோடு, சேலம் 7, விலை 75ரூ.
பெற்றோரையும் முதியவர்களையும் உதாசீனப்படுத்துபவர்களுக்கு நல்லதொரு பாடத்தைப் புகட்டும் வகையில் மத்திய அரசாங்கம் பெற்றோர் முதியோர் பராமரிப்பு சட்டத்தை இயற்றி இருக்கிறது. இந்தச் சட்டத்தையும் விதிகளையும் எளிமைப்படுத்தி கொடுத்திருக்கிறார் வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம். நன்றி: தினத்தந்தி, 12/2/2014.