சினிமாவுக்கு வந்த சின்ன வாத்தியார்
சினிமாவுக்கு வந்த சின்ன வாத்தியார், வெ. மு.ஷா. நவ்ஷாத், ஓவியம் பதிப்பகம், மதுரை, பக். 160, விலை 110ரூ.
தமிழ்த் திரை உலகில், பெரிய வாத்தியார் எம்.ஜி.ஆர்., சின்ன வாத்தியார் கே. பாக்யராஜ். இந்தியாவின் மிகச் சிறந்த திரைக் கதையாசிரியர்களில் ஒருவரான பாக்யராஜ், கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளாங்கோவில் என்ற கிராமத்தில், 1953ல் பிறந்தார். சென்னைக்கு வந்த அவர், பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்து, சிறு சிறு பாத்திரங்களில் நடித்து, கதாநாயகன் பாத்திரம் ஏற்றும், பிறகு சொந்தமாகக் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்ற நான்கு பொறுப்புகளையும் ஏற்றும், சாதனை புரிந்தார். அவர் மொத்தம் 24 தமிழ்ப் படங்களை எழுதி இயக்கி இருக்கிறார். தமிழ் மக்களின், பல்ஸ் தெரிந்த திரை ஞானி. திரைத்துறையில் கவுண்டமணி, கல்லாப்பெட்டி சிங்காரம், செந்தில், சங்கிலி முருகன், ஊர்வசி போன்ற கலைஞர்களை அறிமுகப்படுத்தினார். பத்திரிகைத் துறையிலும் பாக்யராஜ் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார். 1988ம் ஆண்டு பாக்யா வார இதழ் வெளிவரத் துவங்கியது என்பது உள்ளிட்ட பல சுவையான தகவல்களை அள்ளித் தருகிறார் நவ்ஷாத். -எஸ். குரு. நன்றி: தினமலர், 25/10/2015.