ஜென்னல்
ஜென்னல், சத்குரு, எழுத்தாக்கம் சுபா, தங்கத் தாமரை பதிப்பகம், சென்னை, விலை 125ரூ.
ஸெங்காய் என்னும் ஜென் குருவிடம் குடும்பத்தோடு போய் ஆசி வேண்டினான் ஓர் அரசன். உன் தந்தை இறப்பார், நீ இறப்பாய், உன் மகன் இறப்பான், உன் பேரக்குழந்தை இறக்கும் என்று ஆசி வழங்கினாராம் அந்த ஞானி. மனம் நொந்துபோன அரசன் நல்ல வார்த்தையாகச் சொல்லக் கூடாதா? என்று கேட்டபோது, இதை விடச் சிறந்த ஆசிர்வாதம் வேறு என்ன இருக்க முடியும்? என்று வேறு அவர் கேட்டாராம். இந்த ஜென் கதையை மேலோட்டமாகப் பார்த்தால் உண்மையான பொருளைப் புரிந்துகொள்வது சிரமம். சத்குரு ஜக்கி வாசுதேவ் இதற்கு அழகான விளக்கம் தருகிறார். பிறப்பு நேர்ந்த பிறகு மரணம் என்பது எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பது நியதி. மரணத்தைத் தவிர்க்க முடியுமா என்ற கவனத்திலேயே வாழ்பவர்கள் உண்மையில் வாழும் கணங்களையே உண்மையாக வாழாமல் தவிர்த்தவர்களாகி விடுகிறார்கள் என்கிறார் சத்குரு. தலைமுறை தலைமுறையாகத் தகப்பன், மகன், பேரன் என்ற இயல்பான வரிசையில் மரணம் வரட்டும் என்பதே ஜென் குருவின் ஆசி. அந்த வரிசை தவறி முன்பின்னாக மரணம் நேர்ந்தால் அதுதான் சோகம் என்பதையும் எடுத்துச் சொல்கிறார். கிருஷ்ணன் இருக்கும்போது அவரை உணர முடியவில்லை. அவர் போனதற்குப் பின் பஜனை செய்து என்ன உபயோகம்? இயேசு இருந்தபோது அவரைச் சிலுவையில் அறைந்தாகிவிட்டது. இப்போதோ அவருடைய போதனைகள் மூலை முடுக்குகளிலெல்லாம் ஒலிக்கின்றன. இதை ஆன்மிகம் என்று சொல்லமுடியாது. ரசிகர் மன்றம் என்று சொல்லலாம் என்று பட்டென்று போட்டு உடைக்கிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ். பத்துப் பேருக்குத் தெரிகிற மாதிரி ஒரு விஷயம் புகழ் பெற்றுவிட்டால் போதும். அதைப் பிடித்துக்கொண்டு ஆடத் தொடங்கிவிடுகிறோம் என்பதையும் ஒரு கதைக்கான விளக்கத்தில் சொல்கிறார். காட்டுப் பகுதியில் நான்குவான் என்னும் ஜென் ஞானி புல்வெட்டிக் கொண்டிருந்தபோது, அவரைக் கவனிக்காமல் அந்த ஞானியின் ஆசிரமத்துக்குப் போகும் வழியை அவரிடமே கேட்டுக்கொண்டு நிற்கிற அப்பாவித் துறவி ஒருவரைப் பற்றிய கதை. கண்முன்னால் இருக்கிற கடவுளை எங்கோ போய்த் தேடுகிற மனநிலை இது. இப்படி ஐம்பது ஜென் கதைகளுக்கான சத்குருவின் விளக்கத்தை அழகான தமிழில் எழுதியிருக்கிறார்கள் சுபா இரட்டையர். ஜென்னல் என்ற தலைப்பிலேயே சத்குரு ஆங்கிலத்தில் எழுதியது இப்போது அதே தலைப்பில் செல்வி மானஸா வாசுதேவனின் அழகான கோட்டுப் படங்களோடு வெளியாகியிருக்கிறது. ஆழ்ந்து படிக்கவும். அவசரப்படாமல் சிந்திக்கவும், வைத்துப் பாதுகாக்கவும் வேண்டிய நல்ல நூல் இது. -சுப்ர. பாலன். நன்றி: கல்கி, 25/5/2014.