திருவள்ளுவரின் புதிய பரிமாணங்கள்
திருவள்ளுவரின் புதிய பரிமாணங்கள், முனைவர் ந. வேலுசாமி, லியோ டால்ஸ்டாய் பதிப்பகம், சென்னை 10, பக். 344, விலை 250ரூ.
உலகப் பொதுமறையாம் திருக்குறளை மையப்படுத்தி எத்தனை ஆய்வுகள் வேண்டுமானாலும் செய்து கொண்டே இருக்கலாம். திருவள்ளுவரின் புதிய பரிமாணங்கள் என்ற இந்நூல் கவனிக்கத்தக்க படைப்பாகும். அன்னை, தந்தை, ஆசிரியன், குடிமகன், நண்பன், மனைவி, அமைச்சன், சான்றோன், நீதிபதி, ஆட்சியாளன் போன்றோர் வாழ்வில் தவிர்க்க முடியாதவர்கள். அவர்களைப்பற்றி திருவள்ளுவர் பல்வேறு பரிமாணங்களுடன் அணுகியிருப்பதைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர். திருவள்ளுவர் அன்னை பற்றிக் கூறிய கருத்துகள் யாவும், தாய்மை, பெண்மையின் மேன்மையான குணங்களை வெளிப்படுத்துகின்றன என்று கூறும் நூலாசிரியர், சங்க காலப் பெண்பாற் புலவர்களுக்கு இணையாக, அவர்களுக்கெல்லாம் தாய்ப் புலவராக திருவள்ளுவர் இருந்தார் என்பதை தகுந்த உதாரணங்களோடு விளக்கியுள்ளார். குடும்பத்தலைவன், பொறுப்புள்ள தந்தை ஆற்ற வேண்டிய கடமைகள், ஆசிரியனுக்குரிய இலக்கணம், கல்வி, கல்லாமை, நல்ல குடிமகனுக்குரிய நற்பண்புகள் போன்றவை குறித்த வள்ளுவரின் அறிவு சார்ந்த பார்வையை நமக்கு இந்த நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நட்பு, மனைவி, அமைச்சன், சான்றோன், நீதிபதி, ஆட்சியாளன் என வாழ்வின் முக்கிய அம்சங்களைப் பதிவு செய்திருக்கும்விதம் திருக்குறளையும் இதே அம்சங்கள் குறித்த பிற இலக்கிய பதிவுகளையும் வாசிக்கத் தூண்டுகிறது இந்நூல். நன்றி: தினமணி 19/12/2011