சுவடிகள் வழங்கி கவிதைகள்
சுவடிகள் வழங்கி கவிதைகள், கவிஞர் கோ. வேணுகோபாலன், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, பக். 208, விலை 125ரூ.
பழந்தமிழ்க் கவிதைகளில் உள்ள வடிவங்கள், சொல்லாட்சிகள், உவமைகள், அணிகள் என்று அத்தனையையும் ஒரு சேரப் படித்து இன்புற நினைப்பவர்களுக்குப் பொருத்தமான நூல். வேறு எந்த மொழிக்கும் இத்தனை சிறப்பு உண்டா என்று கேட்கும் அளவிற்கு பழந்தமிழ்க் கவிதைகளை, இலக்கியச் செல்வங்களை ஒன்று திரட்டி, அதற்கேற்ற விளக்கமும் தந்து தமிழை உயர்த்தியிருக்கிறார் ஆசிரியர். கம்பன் பாட்டுகளில் களிக்க வைக்கிறார். வில்லிபுத்தூராரின் கவிதையழகில் மயங்க வைக்கிறார். வள்ளலாரின் பாராட்டுகளில் மனம் கசிந்து உருக வைக்கிறார். திருக்குறள், சிலப்பதிகாரம் என்று எல் இலக்கிய அழகையும் நம் நெஞ்சில் பதிய வைத்து, இதுவல்லவோ தமிழ் என்று பறைசாற்றுகிறார்.
—-
சாபம், சல்மா, காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில், பக். 144, விலை 110ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-801-2.html
பெண்களின் மன உலகம் சார்ந்த சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. கதைகளில் வரும் பெண் பாத்திரங்கள் தமக்கான அடையாளங்களைத் தேடும் விதத்தில் ஏதோ ஒரு வகையில் அதிர்வை உண்டு பண்ணுகின்றன. மன உணர்வுகளை, அதன்போக்கில் விட்டுவிட்டு, பெண்மைக்கான பாதையை, தனி ஒரு தடத்தில் பதியும் தைரியம் தெரிகிறது. நவீன யுகத்தின் வார்ப்புகளாக பெண்கள் மாற வேண்டும் என்ற பிரச்சாரம் அல்ல அது. அவளது உடல், மனம் ஆகியவற்றின் மீது நிகழ்த்தப்பெறும் வன்முறைகளை வெறுக்கும் ஒரு பெண் மனமாகவே அவை பதிவூட்டப்படுகின்றன. பெண்களின் உள் மன உலகம் சார்ந்த இந்தக் கதைகள் அதனதன் அடையாளங்களைத் தேடும் முயற்சியில், படிப்போரையும் சேர்த்துக் கொள்கிறது. வலியில் வரும் அவள் ஒரு உதாரணம். -இரா. மணிகண்டன். நன்றி : குமுதம், 8/5/2013.