நபி வழி அறிவோமா?
நபி வழி அறிவோமா?, திருமதி வசந்தகுமாரி செல்லையா, திருமதி வசந்தகுமாரி வெளியீடு, பக். 433, விலை 280ரூ.
இந்நூலாசிரியர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், எழுத்தாளருமாவார். இவர் தன் மகன் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக மாறியதால், இஸ்லாம் குறித்து அறியும் விதமாக அது குறித்த நூல்களை ஆழமாக படிக்க, அதன் விளைவாக உருவானதே இந்நூல். இஸ்லாமிய மார்க்க அறிஞரைப் போல் மிக நுட்பமாக நபிகள் நாயகத்தையும், அவரது தூதுத்துவத்தையும் இஸ்லாமியை சித்தாந்தங்களுடன் இந்நூலில் விளக்கியுள்ளது – படிப்பவர்களை வியக்க வைக்கிறது. இந்நூல் 10 அத்தியாயங்களைக் கொண்டது. நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை அவர் பிறப்பு முதல் இறப்பு வரை நடந்த நிகழ்வுகள் பலவற்றை கோர்வையாகவும், நேர்த்தியாகவும் இந்நூலில் தொகுத்துள்ளார். குறிப்பாக – நபிகள் நாயகத்தின் இளவயது வாழ்க்கை, மணவாழ்க்கை, 40 வயதில் நபித்துவம், மக்காவாசிகளால் அடைந்த இன்னல்கள், மதினா சென்றது, அங்கிருந்து பல நாடுகளுக்கும் இஸ்லாம் பரவியது, மக்கா நகரை வெற்றி கொண்டது, இக்காலகட்டத்தில் பல போர்களை எதிர்கொண்டது, போரில் கடைப்பிடித்த நெறிகள், தோழர்களுடனான நட்புறவு, அவ்வப்போது இறைவனிடமிருந்து நபிக்கு வேத வசனங்கள் வந்த விதம், நபிகளின் இறுதி நாட்கள், நாயகத்திற்குப் பின் நபித்தோழர்கள் அபூபக்கர், உமர் ஆகியோரின் ஆட்சி முறைகள்… என்று ஏராளமான தகவல்களை ஆசிரியர் ஆதாரப்பூர்வமாக தொகுத்துள்ளார். ஒரு மாற்று மதத்தவரால் இந்தளவுக்கு இஸ்லாமிய கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. -பரக்கத். நன்றி: துக்ளக், 2/3/2016.