நான் தேர்ந்தெடுக்கப்பட்டவளா
நான் தேர்ந்தெடுக்கப்பட்டவளா, ஆலிஸ் கெ.ஜோஸ், நோஷன் பிரஸ், சென்னை, பக். 398, விலை 350ரூ.
பெண்களுக்கு உகந்தது ஆசிரியர் அல்லது மருத்துவர் பணி என்பார்கள். இவ்விரு பணிகளும் அறம் சார்ந்தவை என்பதுதான் அதற்கு காரணம். நூலாசிரியரான ஆலிஸ் கெ. ஜோஸ், 40 ஆண்டுகள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு ஓய்வு பெற்றவர். அவரே தனது சுய சரிதையை எழுதியுள்ளார். புகழ்பெற்ற தலைவர்கள், சான்றோர்கள் அல்லது சாதனையாளர்களின் சுயசரிதையின் நோக்கம் தனி மனிதனோ அல்லது ஒரு சமூகமோ கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அதில் இருக்கும் என்பதுதான். ஆனால் ஒரு சாதாரண மனிதன் வாழ்வில் கூட மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இருக்குமா என்றால் நிச்சயம் இருக்கத்தான் செய்யும். இறைவன் படைப்பில் ஒவ்வொரு வரும் ஏதேனும் ஒரு வகையில் தனித்துவம் உடையவர்கள்தான். அந்த வகையில், காந்திய சிந்தனையில் பற்று கொண்ட ஆசிரியை ஜோஸ், தனது வாழ்வில் இளம் பருவம் முதல் முதுமைப் பருவம் வரையிலான வாழ்வியல் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டதை விளக்கமாக விவரித்துள்ளார். கூச்சமும், மிரட்சியும் மிக்க ஒரு சாதுப் பெண்ணான ஜோஸ், எவ்வாறு மன உறுதி பெற்றவராக மாறி வாழ்வில் வெற்றி பெற்றுள்ளார் என்பதைப் படிக்கும்போது, அவரும் ஒரு வகையில் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே என்பதை உணர முடிகிறது. நன்றி: தினமணி, 10/11/2014.