பரபரப்பான வழக்குகள்

பரபரப்பான வழக்குகள், தந்தி பதிப்பகம், பக். 352, விலை 200ரூ.

தினத்தந்தியில் வரலாற்றுச் சுவடுகள் நெடுந்தொடர் வெளியானபோது, அதில் பரபரப்பான வழக்குகள் என்ற தலைப்பில் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் நடந்த இதயத்தை உறைய வைத்த கொலை வழக்குகளும், மக்கள் மத்தியில் பெரும் அனுதாபத்தை ஏற்படுத்திய எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கும் இடம் பெற்றன. இவை வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றன. இது இப்போது தந்தி பதிப்பகம் சார்பில் நூலாக வெளிவந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் அகில உலகையே அதிர்ச்சி அடையச் செய்த நிகழ்ச்சி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதாகும். இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய மகாத்மா, சுதந்திரம் பெற்ற 5 1/2 மாதத்தில் கொல்லப்பட்டது உச்ச கட்ட சோகம். தமிழகத்தில் பரபரப்பை உண்டாக்கிய வழக்குகளில் லட்சுமி காந்தன் கொலை வழக்கு ஒன்றாகும். தமிழ் சினிமா உலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரும், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதுதான் இதற்குக் காரணமாகும். 1967ம் ஆண்டுத் தேர்தலுக்கு முன்பு எம்.ஜி.ஆரை நடிகர் எம்.ஆர்.ராதா சுட்ட வழக்கு, ராஜீவ் காந்தி கொலை வழக்கு, ஆளவந்தார் கொலை வழக்கு, ஆட்டோ சங்கர் வழக்கு, மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கு, விஷ ஊசி வழக்கு ஆகியவைகளும், வெளிவராத தகவல்களும், படங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. குறைந்த விலையில் அதிக பக்கங்கள். சரித்திரத்தின் ரத்தக் கறை படிந்த பக்கங்களை இளைய தலைமுறையினரும் படித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த நூல் வெளியாகியுள்ளது. இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய நீதிபதி எஸ்.விமலா அவர்கள், இலக்கிய நூல்கள், துறை சார்ந்த நூல்கள் மற்றும் தொழில்நுட்ப நூல்கள் இவற்றின் வரிசையில் இருந்து வேறுபட்டு பல்கலைக் காவியமாக இந்த நூல் திகழ்கிறது என்று புகழாரம் சூட்டியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 15/7/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *