பூ மலரும் காலம்

பூ மலரும் காலம், ஜி. மீனாட்சி, பாவை பிரிண்டர்ஸ் (பி) லிட், விலை 85ரூ.

இலக்கிய வெளியில் பெண் எழுத்தாளர்கள் குறைந்துவிட்ட நிலையில் ஜி. மீனாட்சி போன்ற சிலரின் சிறுகதைகள் புதிய தெம்பூட்டுகின்றன. இவரின் பூ மலரும் காலம் என்னும் தொகுப்பில் 11 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இச்சிறுகதைக் குறித்து, எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் கருத்து- எழுத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கும் ஓர் எழுத்தாளரின் தொகுதி என்பதை இதிலுள்ள படைப்புகள் புலப்படுத்துகின்றன. வணிக நோக்கில்லாமல் தனி மனிதனையும், சமுதாயத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இவரின் கதைகள் எழுதப்பட்டுள்ளன என்ற கருத்துக்கு மாற்றுக் கருத்து ஏதுமில்லை எனலாம். இத்தொகுப்பில் வளையல்காரம்மா என்ற சிறுகதை இன்றையச் சூழலில், வீடு தேடி வரும் வளையல் வியாபாரிகள் இல்லாமல் போன சோகத்தை நெஞ்சம் நெகிழும் வகையில் சொல்கிறது. இந்தத் தொகுப்பின் மிக முக்கியமான கதைகளில் ஒன்று, பூ மலரும் காலம் என்னும் சிறுகதை யதார்த்தமான எளிய காதல் கதையாய் நெஞ்சில் நிறைகிறது. வலி இல்லாத வழி, ஒரு மழைக் காலம், மறுபக்கம் போன்ற கதைகள் கட்டாயம் சுவாரசிய வாசிப்புக்கு உகந்தவை. வெளிப்படையான பாலியலைப் பேசும் பெண்ணியமாக இல்லாமல், வீட்டுக்குள் முடங்கிப் போகிற பழைமைவாதியாகவும் இல்லாமல் கலாசாரத்துக்கு உட்பட்ட பெண்ணியவாதியாக கதைகளில் வலம் வருகிறார் மீனாட்சி. -கௌரி. நன்றி: கல்கி, 12/1/2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *