வெளிச்சம் விற்க வந்தவன்
வெளிச்சம் விற்க வந்தவன், ராஜா செல்லமுத்து, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 320, விலை 200ரூ.
மழை பொழிய ஆரம்பிக்கும் முன்னே வரும் மண்வாசனை மாதிரியான கதைகள் இவை. கதைக்களம், சித்தரிக்கும் மாந்தர்கள், ஊடாடும் விலங்குகள் எல்லாமே நம்முடன் நெருக்கமாக உறவாடியவையே. அன்றாடம் நம் கண்முன் நிகழ்ந்து மறைந்துபோன சம்பவங்களின் நினைவை மீட்டெடுக்கும் கதைகள் அதிகம். ஒரு கதையைப் படித்ததும் அடுத்த கதையையும் படிக்கலாமே என்று ஏங்க வைக்கும் யதார்த்த உந்துதல். இப்படி ராஜா செல்லமுத்துவின் இந்த சிறுகதைத் தொகுப்புக்கு பல சிறப்புகள். ஆடுகளை சுமந்து செல்லும் – போடி ரயிலில், வரும் ஆடுமேய்க்கும் கருப்பணன் தொடங்கி வெளிச்சம் விற்க வந்தவன் கதையில் வரும் பாண்டியனின் முடிவுரை நிஜ வாழ்வின் பதிவுகள், நாகம்மா, செல்வராணி, தீபலட்சுமி, கருப்பாயிக் கிழவி என்று அவர் படைத்திருக்கும் மாந்தர்களின் வழி இந்த சமூகச் சிக்கல்களை அவர் அலசிச் செல்வது உண்மையின் வேர். நகரமயமாக்கலால் கிராமங்கள் அனுபவிக்கும் வலியை நம்மையும் உணரவைக்கிறார். மொத்தத்தில் கிராமங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் மதுரை – தேனி வட்டார வழக்கில். நன்றி: குமுதம், 13/7/2015.