ஸ்ரீவால்மீகி ராமாயணம் ஸுந்தர காண்டம் (2 பாகம்)
ஸ்ரீவால்மீகி ராமாயணம் ஸுந்தர காண்டம் (2 பாகம்), சாரநாத கோபாலன், ஸ்ரீ விக்னேஸவரா வேங்கடேஸ்வரா டிரஸ்ட், சென்னை18, பக்,1316, விலை 500ரூ.
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் சுந்தர காண்டத்துக்கு சிறப்புகள் பல உண்டு. மனதில் நினைத்ததை முடித்த அனுமன் கதை பேசப்படுவதால், சுந்தரகாண்டத்தைப பரிகாரப் பாராயணத்துக்கும் சிலர் பரிந்துரைப்பதுண்டு. ஆனால் வால்மீகி என்ற கவிஞரின் சிறப்பை உணர்ந்துகொள்ள சுந்தரகாண்டம் பெரிதும் கைகொடுக்கிறது. 68 அத்தியாயங்கள், அனைத்துக்கும் வடமொழி எழுத்துகளில் மூலம், தமிழில் மூலம் மற்றும் மொழிபெயர்ப்பு, வடமொழி எழுத்துக்களுக்கானப் பதவுரை ஆகியவை கவியினைத் தெளிவாக விளங்க வைக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும், ஆங்கிலத்தில் ஒவ்வொரு சுலோகத்துக்குமான மொழிபெயர்ப்பு எனக் கொடுத்துள்ளது மிகவும் சிறப்பு. தமிழ் – ஆங்கிலம் – சமஸ்கிருதம் என மும்மொழிக் கலவையில் அமைந்த பெரிய நூல். சுந்தரகாண்டம் பாராயணம் செய்தால் என்ன பலன்? எந்தக் கிரமத்தில் பாராயணம் செய்ய வேண்டும் போன்ற தகவல்கள் அனைவருக்கும் உதவும். இடையிடையே விளக்கப்படும் விளைக்கதைகள் சுவாரஸ்யத்தைத் தூண்டுகின்றன. அனுமனின் வீரதீரத்தைப் பதவுரை வழியே வர்ணனைகளோடு படிக்கும் அனுபவமே அலாதி. ஒவ்வொரு அத்தியாயத்திலும் சுருக்கமாகத் தரப்படும் விளக்கத்தைப் படித்தாலே போதும்… பாராயணம் செய்ததுபோல் ஆகிவிடும். நன்றி: தினமணி 31-10-2011.