அக்பர்
அக்பர், க. வெங்கடேசன், சாந்தா பப்ளிகேஷன்ஸ், பக். 407, விலை 180ரூ.
இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் வருகை முக்கியமானதொரு திருப்புமுனை. அதிலும் அக்பரின் ஆட்சி காலத்தில், பல்வேறு போர் விதிமுறைகளை தளர்த்தியும், முஸ்லிம் அல்லாதோர் மீது திணிக்கப்பட்ட வரிகளை தளர்த்தியதாலும், அவர் வரலாற்றில் அழியாத இடத்தை பெற்றார். தந்தை ஹுமாயூன் இறந்த பிறகு 14 வயதில் அரியணை ஏறிய அக்பர், யானை, புலிகளை வேட்டையாடுவது, குதிரை சவாரி உள்ளிட்டவற்றில் தணியாத ஆர்வம் கொண்டவராக இருந்தார். தன்னுடைய 20ம் வயதில், தன்னிச்சையாக செயல்பட்டு அக்பர், நாட்டு மக்களின் நிலை, நாட்டின் செல்வ செழிப்பு, அண்டை நாடுகளை தன்வயமாக்குதல் உள்ளிட்டவற்றில் மிகுந்த அக்கறை காட்டினார். இந்த நூலில் அக்பரின் தனிப்பட்ட குணநலன்கள், அவரது ஆட்சியில் செய்யப்பட்ட நிர்வாக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன. சுதந்திரமாக ஆட்சி செய்ய நினைத்த காந்தேஷ் மன்னன் பகதூர் சமரசம் பேச வந்த போது, அவரை தீர்த்துக்கட்ட அக்பர் மேற்கொண்ட செயலை, வரலாற்று ஆசிரியர் ஸ்மித் வார்த்தையில், அவமானகரமான வஞ்சகச் செயல் என்று (பக். 173) பதிவு செய்திருக்கிறார். அவர் நிர்வாக அமைப்பில், 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவுக்கு வெளியே பிறந்தவர்களான அரேபியர்கள், பாரசீகர்கள் முக்கிய பதவி வகித்தனர். கீழ்நிலைகளில் இந்து கணக்காயர்கள் இருந்தனர். அது மட்டும் அல்ல, அவர் போர்ச்சுகீசியருடன் நட்பு பூண்டது. வர்த்தக, அரசியல், சமயநோக்கம் கொண்டது என்று கூறும் ஆசிரியர், அக்பரை மதம் மாற்றும் முயற்சியில் போர்த்துகீசியர் தோல்வி அடைந்தனர். மாறாக கோவா பகுதியில் தங்கள் மதத்தை பரப்ப அவர்கள் வழி தேடினர் என்ற தகவலும் உள்ளது. வரலாற்றை விரும்புவோர், ஆதாரங்களுடன் கூடிய, இந்த நூலைப் படிக்கலாம். -வித்யா. நன்றி: தினமலர், 29/12/2012.
—-
காலந்தோறும் கல்லாடர், கல்லாடன், சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை78, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-7.html
அகப்பொருள் குறித்து அருமையான பாடல்களை இயற்றிய புலவர் கல்லாடர் சங்க காலத்துக்குப் பிறகு தோன்றியவர் என்று கருதப்பட்டாலும் கல்லாடர் என்ற பெயரில் பல புலவர்கள் பின்னர் வழிவழியாக வாழ்ந்தார்கள் என்று தெரிகிறது. இந்த புலவர்களின் பெருமைகளையும் இலக்கிய ஆற்றலையும் வெளிக்கொண்டு வரும் வகையில் புதுச்சேரியில் நடைபெற்ற கருத்தரங்கில் அறிஞர்கள் பலர் தெரிவித்த கருத்துக்கள், நூல் வடிவமாக ஆக்கி தரப்பட்டுள்ளது. கல்லாடர்கள் மற்றும் கல்லாடம் பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த கட்டுரைகள் மூலம் அறிய முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 2/1/2013.