வம்புக்கு நான் அடிமை
வம்புக்கு நான் அடிமை, ஜே.எஸ். ராகவன், அல்லயன்ஸ், 244, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை 600004, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-141-9.html
பிரபல கட்டுமான நிறுவனத்தின் மூத்த அதிகாரியாகப் பணிபுரியும் இந்நூலாசிரியர், 1960களிலிருந்து பிரபலமான பத்திரிகைகள் பலவற்றிலும் நகைச்சுவையாக கதை, கட்டுரைகள் எழுதி வருபவர். சிவகாமியின் சபதம், சிவசாமி துணை என்கிற முழு நீளநகைச்சுவை நாவல்கள் உட்பட இதுவரை 16 புத்தகங்கள் இவரது கைவண்ணத்தில் வெளியாகியுள்ளன. இவரது படைப்புகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கக்கூடியதாக இல்லாவிட்டாலும், தகவல்களுடன் இழையோடும் நகைச்சுவையைக் கொண்டதாக இருக்கும். பலாவா, வாழையா? என்ற இந்நூலின் முதல் கட்டுரையில் இன்றைய பட்டிமன்ற நிகழ்ச்சிகளின் அபத்தமான போக்கை நகைச்சுவையுடன் படம்பிடித்துக் காட்டுகிறார். சீனாவில் ஒரு விடலைப் பையன் செல்ஃபோன் மோகத்தால் தன் வீட்டுக்குத் தெரியாமல் தனது கிட்னியை விற்று செல்ஃபோன் வாங்கிய சம்பவம், கேரளாவில் சில பகுதிகளில் கல்யாண நிகழ்ச்சிகளில் நடக்கும் ராகிங் பழக்கம் அளவுக்கு மீறிச் சென்றதால், ஒரு கல்யாணமே நின்று போன சம்பவம்.. இப்படி முரணான 5 சம்பவங்களை இதென்ன கூத்து? என்ற கட்டுரையில் நகைச்சவை பாணியிலே விமர்சிக்கிறார். இன்னொரு கட்டுரையான வம்புக்கு நான் அடிமையில் வீட்டுப் பெண்கள் தன் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரப் பெண்களிடம், தன் வீட்டு வேலைகளைவிட அடுத்த வீட்டு வம்புகளை அறிந்து கொள்வதில் காட்டும் ஆர்வத்தை விவரிக்கிறார். இப்படி இந்நூலில் மன அழுத்தத்தைக் குறைக்கும் 36 தமாஷான கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. -பரக்கத். நன்றி; துக்ளக், 11/9/2013
—-
பாலையில் ஓர் ஒற்றைப் பேரீச்சை, முவப்பிகா பப்ளிஷர்ஸ், ஏ.ஐ.118, எட்டாவது மெயின் ரோடு, சாந்திக்காலனி, அண்ணாநகர், சென்னை 40, விலை 45ரூ.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் அமைத்த ஆட்சி முறை ஈடு இணையற்ற ஒன்றாகும். அவர்களின் மறைவுக்குப்பிறகு ஆட்சி பீடத்தில் அமர்ந்து நல்லாட்சி செய்தவர்களில், உமர் (ரலி) முக்கியமானவர். அவர் வாழ்க்கை வரலாற்றை பாலையில் ஓர் ஒற்றைப் பேரீச்சை என்ற தலைப்பில் உடன்குடி எம். முகம்மது யூசுப் விரிவாக எழுதியுள்ளார். உமர் (ரலி) அவர்களின் கனிவும், கண்டிப்பும், நீதியும், நேர்மையும், எளிமையும், பணிவும் எல்லா ஆட்சியாளர்களும் பின்பற்றத்தக்கவை என்பதை ஆசிரியர் இந்த நூலில் எடுத்துக்கூறி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 4/9/2013.