அமெரிக்காவின் ஒபாமாக்களும் இந்தியாவின் தலித்துக்களும்

அமெரிக்காவின் ஒபாமாக்களும் இந்தியாவின் தலித்துக்களும், டி. ஞானையா, அலைகள் பதிப்பகம், 4/9, 4வது மெயின் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 24, பக். 405, விலை 250ரூ.

நூலாசிரியர் ஞானய்யாவுக்கும், இந்த நூலுக்கும் அணிந்துரை வழங்கிய நீதியரசர்(ஓய்வு) வி. சதுர். கிருஷ்ணய்யருக்கும், வயது 90ஐ தாண்டிவிட்டது. உலக வரலாற்றில் மிகவும் சென்சிடிவான ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட பிரிவனிர்களின் பரிதாபத்துக்குரிய வாழ்க்கை பற்றியும், அந்த சமூகத்தை முன்னேற்ற பாடுபட்ட தலைவர்களுள், சில முன்னோடிகள் குறித்தும் விரிவாகவும், விலாவாரியாகவும் இந்த நூலை எழுதியிருக்கிறார் டி. ஞானய்யா. ஆங்கிலத்தில் 500 பக்கங்களுடன் வெளிவந்துள்ள இந்த நூலின் தமிழ் பெயர்ப்பு இது. செவ்விந்தியர்களுடன் சொந்த பூமியான அமெரிக்காவை, கொலம்பஸ் கண்டுபிடித்தார் என்பது வரலாறு. அங்கு குடியேறி ஐரோப்பியர்கள், ஆப்பிரிக்க கருப்பின மக்களை, அங்கு இறக்குமதி செய்து, நாட்டின் வளத்தைப் பெருக்கினர். அறிவு ஜீவிகளை கொண்டு வந்து, அறிவியல் வளத்தையும் பெருக்கினர். அடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட அவர்கள் அமெரிக்க வாசிகளாக மாறி குடியுரிமை பெற்று, இன்று ஒபாமாவை அதிபர் நிலைக்கு உயர்த்தியுள்ளனர். இது வரலாறு. நூலாசிரியர் ஆவணப் படுத்தியது பாராட்டப்பட வேண்டிய பணி. இரண்டாவது பாகமாக, இந்திய வடிவ அடிமை முறை பற்றி அதன் தோற்றத்திலிருந்து ஆய்வு செய்திருக்கிறார் நூலாசிரியர். அமெரிக்காவை பொறுத்தவரை 400 ஆண்டு கால பிரச்சினை இது. ஆனால் இந்தியாவின் வரலாறும், பின்னணியும், இந்தப் பிரச்னையை பொறுத்தவரை, நாலாயிரத்திற்கு மேற்பட்ட ஆண்டுகள் தொடர்புடைய விஷயம். கடந்த 60 ஆண்டுகளாக, பாபாசாகேப் அம்பேத்கரின் விழிப்பூட்டலில், ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட அந்த சமூகப் பிரிவு, கல்வி, வேலை வாய்ப்பு, சமூக அந்தஸ்து ஆகியவற்றில் அரசுகளின் உதவியுடன் முன்னேறி வருகிறது. இந்தப் பகுதியை எழுதியுள்ள ஆசிரியர் முன்னேறியுள்ள பல தலித் சமூகப் பிரதிநிதிகளைப் பற்றி அதிகம் குறிப்பிடவில்லை. கார்ப்பரேட் குழுமத்தில் உயர் நிர்வாகிகளாக தலித்கள் இடம் பெறவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதற்குரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ள அரசுகளின் திட்டங்களைக் குறிப்பிடவில்லை. இவரது ஆய்வு இந்தியா விஷயத்தில் சற்றே குறைந்து காணப்படுகிறது. சமூக ஆர்வலருமான டி.ஞானய்யாவின் இந்த பதவுகள், இந்திய தலித் சமூகத்திற்கு நல்ல பலனை அளிக்கும் என நம்பலாம். -ஜனகன். நன்றி: தினமலர், 1/4/2012.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *