இரத்த மிகை அழுத்தமும் உங்கள் இதயமும்
இரத்த மிகை அழுத்தமும் உங்கள் இதயமும், தமிழில்-மருத்தவர் சிவசுப்ரமணிய ஜெயசேகர், அடையாளம், அடையாளம் 1205/1, கருப்பூர் சாலை புத்தாநத்தம், திருச்சி 621310. விலை 40ரூ.
உடல்நலம் காக்கும் கையேடு, இந்நூல் மேயோ கிளினிக்னின் ஹை பிளாட் பிரஷர் அண்ட் யுவர் ஹார்ட்- 5 ஸ்டெப்ஸ் யு கேன் டேக் தட் சேவ் யுவர் லைஃப் என்னும் ஆங்கில நூலின் தமிழாக்கம். உடன் இருந்தே மௌனமாகக் கொல்லும் நோய் என ரத்த மிகை அழுத்தத்தை மருத்துவ உலகில் சொல்வதுண்டு. ஒருவருக்கு ரத்த மிகை அழுத்தம் இருக்கிறது என்றால், இதயநோய், வாத நோய், சிறுநீரக செயலிழப்பு, பார்வைக் கோளாறு உள்ளிட்ட நோய்கள் வரக்கூடும் என எச்சரிக்கை மணி அடிப்பதாகவே பார்க்கப்படுகிறது. இது ஒரு நோய் அல்ல. 120/80 என்ற அளவீட்டில் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்காவிட்டால் மேற்கூறிய நோய்களை உண்டாக்க அது ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது. ரத்தமிகை அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க 5 வழிமுறைகளை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழிமுறைகளை ரத்த மிகை அழுத்தம் இருப்பவர்களும், இல்லாதவர்களும் கடைபிடித்தால், வராமல் தடுக்கவும் வந்தால் குறைத்துக் கொள்ளவும் முடியும். இன்றைய உலகில் மன அழுத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ரத்த மிகை அழுத்தம் ஏற்பட மன அழுத்தம் எவ்வாறு காரணமாகிறது என்பதையும் அதைத் தவிர்க்கும் வழிகளையும் ஆசிரியர் தருகிறார். சிக்கலான மருத்துவப் பிரச்சினைகளை விரிவாக ஆராய்ந்து அதற்கான சிகிச்சை முறைகள் குறித்த நூல்களையே மேயோ கிளினிக் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. அத்தகைய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வழங்குவது பாராட்டுக்குரிய பணி. நன்றி: தி ஹிந்து, 6/10/2013.