நடன மங்கை
நடன மங்கை, சுரேஷ் குமார் இந்திரஜித், உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 50ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-279-3.html தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர்களுள் ஒருவரான சுரேஷ்குமார் இந்திரஜித்தின் சமீபத்திய சிறு கதைத் தொகுப்பு நடன மங்கை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் சுரேஷ் சென்ற ஒரு வருடத்தில் எழுதிய கதைகளின் தொகுப்பே இந்நூல். தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவரான மௌனியை ஒத்த விவரிப்பு மொழியைக் கொண்டவை சுரேஷின் கதைகள். அதே சமயம் மௌனியின் உலகத்தையும் தாண்டி எழும் இவரது எழுத்துக்கள் சமூகப் பின்புலத்துடன் வெளிப்படும் காத்திரத்தை ஒருங்கே கொண்டுள்ளன. இவரது பாத்திரங்களின் விவரிப்புகள் மனக் கூர்மையுடன் வெளிப்படும். கோயில் திருவிழாவில் கண்ட பெண், முப்பது வருடங்களாக அதே இடத்தில் நின்றுகொண்டிருப்பாள். இம்மாதிரியான மனம் உருவாக்கும் கணங்களின் மாயாஜாலங்களையும் இவரது கதைகள் மிக நுட்பமாகச் சித்திரிக்கின்றன. சுரேஷ் சமீபத்திய கதைகளை வேறு தளத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். பத்துக் கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் விவரிப்பு மொழியின் இறுக்கம் தளர்ந்திருக்கிறது. ஒருவகையில் அது இந்தக் காலகட்டத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். சொப்பன வாழ்வில் மகிழ்ந்து கதை அதற்கு உதாரணம். எழுத்தாளன், நடிகை, காரைக்காலம்மையார் கதை உயிர் எழுத்தில் வெளிவந்தபோதே கவனம் பெற்ற கதை. இக்கதை எழுத்தாளரின் சொந்த அனுபவத்தில் விளைந்தது. அவர் எழுதிய சிறுகதை ஒன்றை வாசித்த நடிகையொருத்தி எழுத்தாளரை சந்திக்க விரும்புகிறாள். அவள் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவள். இம்மாதிரி தீவிர எழுத்துக்களை வாசிக்கும் பழக்கமும் இல்லாதவள். எதற்காகச் சந்திக்க விரும்பினாள் என்பதை சுவாரசியமாக இந்தக் கதை சொல்கிறது. ரோசாப்பூ என்ற சௌந்தரவள்ளியின் கதை, வாழ வேண்டியிருப்பதற்கான மனித மனத்தின் வேட்கையையும் பலவீனங்களையும் இயல்பான தொனியில் சொல்கிறது. அம்மாவின் சாயல் கதை, அருகில் குடிவந்திருக்கும் இளம் தம்பதியினர் குறித்த ஒரு முதியவரின் பார்வையில் தொடங்குகிறது. ஆனால் அதன் தொனி பல்வேறு வழிகளில் சென்று முடிகிறது. தொகுப்பில் உள்ள கதைகள் முழுக்கவும் இந்தக் கால கட்ட சமூகத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளன. நன்றி: தி இந்து, 16/8/2014.