துளு நாட்டு வரலாறு
துளு நாட்டு வரலாறு, மயிலை சீனி. வேங்கடசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 108, விலை 75ரூ.
பண்டைய தமிழக வரலாற்றைப் போலவே துளு நாட்டு வரலாறும் சங்க இலக்கியங்கள் மூலம் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. தற்போதைய தென் கன்னடத்தை துளு நாடாகக் காட்ட நூலாசிரியர் எடுத்துக்காட்டும் சங்க இலக்கியப் பாடல்களின் சான்றுகள் இப்போதும் மிகவும் பொருந்தக்கூடியவையாக இருக்கின்றன. துளு நாட்டின் பெயரை மாமூலனார் தனது பாடலில் குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டும் நூலாசிரியர், அதைப் பல பாடல்களின் மூலம் உறுதிப்படுத்துகிறார். அந்நாட்டின் முக்கிய ஊர்களின் பெயர்கள் சங்கப் பாடல்களில் எப்படிச் சொல்லப்பட்டுள்ளன? அவை இப்போது எந்த பெயரில் அழைக்கப்படுகின்றன? என்று நூலாசிரியர் விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக மங்களூருவை சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுபடுத்தியுள்ள நூலாசிரியர், மங்களாபுரத்துக்கும் கண்ணகிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதையும் தக்க சான்றுகளோடு உறுதிப்படுத்தியுள்ளார். துளு நாட்டு அமைவிடம் வரைபடமாக விளக்கப்பட்டிருப்பதுடன், அந்நாட்டின் அரசர்களான நன்னன் மற்றும் அந்நாட்டை கைப்பற்றிய சேரநாட்டரசர் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார். துளு நாட்டின் வரலாறு நிலத்தின் வரலாறாக மட்டுமின்றி, தமிழின் தொன்மையை அறியும் வரலாறாகவும் இருப்பதை நூலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். துளு மொழியில் பண்டைய தமிழ் சொற்கள் பல பொதிந்திருப்பதையும், அதுகுறித்த தெளிவான ஆய்வு நடத்தப்படுவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். நன்றி: தினமணி, 24/2/2015.